Tuesday, February 1, 2011

எங்க வீட்ல துக்கம் நடத்திருக்கு, பகிர்ந்து கொள்ள வருவீங்களா?

#tnfishermanஆத்மா பேசுகிறது... 

நான் இறந்து போயிருந்தேன்
எனக்காக
தமிழ்நாடே
எழவு வீடாய்
மாறியிருந்தது...

நீங்கள் கொடுக்கும்
"லட்சங்கள்
எம் புருஷனுக்கு ஈடாகுமா?"
என் மனைவி
தலையிலடித்து
கதறுகிறாள்.

விஷயம் என்னவென்று
உணராமல்
தாய் அழுவதால்
என் குழந்தைகளும்
வெடித்து அழுகின்றன.

இந்த வகை மரணத்தில்
இதுவே இறுதியாய் இருக்கட்டும்
என
டிவிட்டர்களும்
வலைப்பதிவுகளும்
தமிழ் உணர்வுடன்
அனல் பரப்பி
தகிக்கின்றன.

ஆனால்
ஒன்றை மட்டும்
என்னால் இயல்பாய்
எடுத்துக்கொள்ளமுடியவில்லை.

நீந்த இயலாத
என்னை இரையெடுத்த
அந்த சிங்கள அரக்கன்
தன்
பல் இடுக்கில்
சிக்கிய இறைச்சித்துண்டை
சிரித்துக்கொண்டே
நீக்கிக்கொண்டு
இருப்பதை

பார்க்கும் போதுதான்
என் ஆத்மாவே
மரித்துவிடும் போலிருக்கிறது.

- பாரதீ.

No comments:

Post a Comment