Wednesday, February 2, 2011

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து.
இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்).
எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.
டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.
அதிலும் குறிப்பாக இப்போது டிவிட்டரில் கை வைக்கின்றனர்.
டிவிட்டர் செய்திகள் மூலம் போராட்டத்திற்கு தூண்டுகோளாக இருக்ககூடிய‌ தகவல்கள பகிர்ந்து கொள்ளப்பட்டு பரஸ்பர ஆதரவு திரட்டப்படுகிற‌து.வெகுஜன ஊடகங்கள் தனிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் செய்திகளை சீர் தூக்கி பார்த்து வெளியிடும் நிலையில் இணையவாசிகள் எந்தவித அச்சமோ தய‌க்கமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு திரட்ட டிவிட்டரும் பேஸ்புக்கும் கை கொடுக்கின்றன.
எனவே தான் செஞ்சீனமும் சரி மதாடிப்படைவாத ஈரானும் சரி மக்கள் அதிருப்தியை எதிர் கொள்ளும் போது டிவிட்டர் நதியின் மூலம் எதிர்ப்பு தகவல்கள் பாய்ந்தோடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கின்றன.
இப்போது எகிப்திலும் இது தான் நடந்திருக்கிறது.
உண்மையில் எந்த ஒரு நாட்டில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு நிலைமை சரியில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு டிவிட்டர் மக்கள் சாதனமாக உருவாகியுள்ளது.
வர்த்தக நிறுவனமாக இருந்த போதிலும் டிவிட்டர் நிர்வாகம் இதனை உணர்ந்திருப்பது நல்ல விஷ‌யம்.அதைவிட இந்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள‌ அறிக்கை வரவேற்கத்தக்கது.
டிவிட்டர் நதி பாய்ந்தோடட்டும் என்னும் தலைப்பிலான பதிவில் டிவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்,தங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் எந்த இடத்தில் இருப்பவரும் உடனடியாக தொடர்பு கொள்ள வழி செய்வதே டிவிட்டரின் நோக்கம் என்றும் இதற்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சில டிவிட்டர் செய்திகள் அடுக்குமுறை தேசங்களில் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர வல்லவை என்றும் கூறியுள்ள ஸ்டோன் டிவிட்டரின் உள்ளடக்கத்தில் உடன்பாடு  இல்லாவிட்டாலும் கூட அந்த தகவல்கள் பாய்ந்தோட செய்து வருவதாக கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை அடிப்படை ம‌னித‌ உரிமை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோன் எந்த கருத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
டிவிடரின் தணிக்கை கொள்கை பற்றியும் விரிவாக விளக்கியுள்ள ஸ்டோன் கருத்து சுதந்திரம் தொடர்பான டிவிட்டரின் கருத்துக்களை பின்தொடர்வதற்கான முகவரியையும் கொடுத்துள்ளார்.
டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக உருவாகியுள்ள நிலையில் டிவிட்டரின் இந்த தன்னிலை விளக்கம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான ஆதரவு வரவேற்கத்தக்கதது.
சில ஆண்டுகளுக்கு முன் ஈரானில் எதிர்ப்பு அலை எழுந்த போது டிவிட்டரே அதன் மையமாக விளங்கியது.அப்போது டிவிட்ட தளத்தின் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த‌து.இந்த நேரத்தில் டிவிட்ட மூடப்பட்டால் போராட்டக்காரகளின் குரல் கேட்காமல் போய் விடும் என் க‌ருதி அமெரிக்க அரசே டிவிட்டரிடம் பராமரிப்பு பணிகளை தள்ளிவைக்க கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.
———-
http://blog.twitter.com/2011/01/tweets-must-flow.htm
———-
(தமிழக மீனவர்களுக்கான டிவிட்டர் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்)


 cybersimman

No comments:

Post a Comment