Monday, January 31, 2011

கண்ணீரில் மிதக்க வைத்தான்:(

மானங்கெட்ட, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளிருக்கும் நாட்டில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள் மீனவர்கள்? ஒன்றல்ல இரண்டல்ல ஐநூற்றி சொச்சம் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக (இதுவே கடைசியாக இருக்குமென வேண்டுகிறேன்) ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு கொடூரமான முறையில் சாகடித்துள்ளனர். ஐந்து லட்சமோ ஒரு லட்சமோ, அரசுப் பதவியோ, கட்சிப் பதவியோ எந்த விதத்திலும் அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தாது. இணைய நண்பர்கள் தங்களால் இயன்றவரை உங்கள் நட்புலகத்திற்கும், உறவினர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துச்சொல்லுங்கள். http://www.savetnfisherman.org/ என்ற தளத்தினை பரவலாக அறியச்செய்யுங்கள். Lets make a difference.









'மீனவ நண்பனாக' என்னென்ன செய்யலாம் - கருணாநிதி?

கடந்த 35 வருடங்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மீனவ கிராம்த்தில் சராசரியாக 200 குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், சுமாராக மூன்று மீனவ கிராமங்களே தமிழகத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன!

தான் சுட்டதாக இலங்கை ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் சுடப்பட்டு இறந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதொரு நிஜம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கபில் சிபல் போன்றோர்கள் கூறுவதை புறம் தள்ளிவிட்டு அப்பிரச்சினையை அணுகுவது போல், இவ்விஷயத்தில் செத்து மடிவது நம் இனம் மட்டுமே என்பதால், இலங்கை சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு, இலக்கில்லாமல் கூப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு சாவு கூட இங்கு விழக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. இந்திய இலங்கை கடல் எல்லையில் தான் இப்பிரச்சினை நடக்கிறது. ஆக இப் பிரச்சினையின் முழுப்பொறுப்பும் மத்திய அரசாங்கத்தையே சார்ந்தது. மாநில அரசு தனது காவல் துறையை அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பாக எல்லையில் நிறுத்த முடியாது. அதேபோல் தமிழக முதல்வர் இலங்கை அதிபரை அழைத்தோ அல்லது அங்கு சென்று பேசியோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது - உண்மை தான் ஏற்றுக் கொள்வோம். அதனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை, பாவம் அவர் என்ன செய்வார்? என்று கேட்பது - சரியல்ல!

சரி இதற்கு விடிவு காண என்ன தான் செய்ய வேண்டும் கருணாநிதி?


* இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மற்றும், சுமார் 18 மைல் தொலைவிலேயே அண்டை நாட்டை கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்கு அதன் மக்களை, குறிப்பாக மீனவர்களை பாதுகாக்க இரு நாட்டு கடல் எல்லையில் நிரந்தர கடல் பாதுகாப்பு படையை நிறுத்த் வேண்டும்.

* அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள நாடு இந்தியா என்று உலக நாடுகளுக்கு காட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டான கால கட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்டெடுக்க வேண்டும்.

* அண்டை நாட்டின் ஆபத்து உள்ள எல்லையோர மாநிலம் என்ற அடிப்படையில், காஷ்மீரைப் போன்று (அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்) சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக தமிழகத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியைப் பெற வேண்டும்.

* அந்த நிதியைக் கொண்டு சிறியதும், பெரியதுமான உலகத்தரத்திலான இருபது மீன்பிடி துறைமுகங்களை அமைத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கடல் உணவுப் பொருட்களை, ஓரிடத்தில் சேமிக்கும் கடல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி, அங்கிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

* ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டால், அதற்கு நீதிமன்ற விசாரணையின் மூலம் தான் தண்டனை அளிக்கப்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் 'ஒரு' தமிழக மீனவனின் உயிர் பறிக்கப்பட்டால் கூட இலங்கையை எதிரி நாடாக அறிவித்து, சர்வதேச அரங்கில் இதற்கான தீர்வைக் காண வேண்டும்.

இவ்வளவுதான்! மீனவர்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பொழுது மீன்பிடி துறைமுகம், ஒருங்கிணைந்த கடல் போக்குவரத்து வசதி, ஏற்றுமதி எல்லாம் எங்கு வருகிறது? ஏன் வருகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால் மத்திய அரசு நிதி உதவியில், கண்காணிப்பில் கிழக்கு கடற்கரை முழுதும் அடுத்தடுத்து நவீன மீன்பிடி துறைமுகங்கள், அவற்றையெல்லாம் இணைக்கும் நீண்ட தூர கடல் போக்குவரது செயல்பாடுகள், அதற்கும் மேலாக கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்றே பிரத்தியேகமான துறைமுகம்..... நினைத்துப் பாருங்கள், இதில் ஒரு அன்னிய நாட்டவன் உள்நுழைந்து தாக்குவது என்பது இந்திய தொழிற்துறையையே தாக்கியதாகாதா...?!

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய விஷயமாயிற்றே, இதை கருணாநிதியால் எப்படி சாத்தியமாக்க முடியும் என்பது தானே கேள்வி? அதையும் பார்ப்போம்.

எதை வைத்துக் கொண்டு மத்திய அரசில், மூன்று கேபினெட், நான்கு இணை அமைச்சர் பதவிகளைப் பெற்றார்? எதை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழலை ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்? அதே மந்திரத்தை வைத்துக் கொண்டுதான் மேற்கூறிய அனைத்தையும் சாத்தியமாக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் பாண்டியை சேர்த்து மொத்தம் 40 பாரளுமன்ற உறுப்பினர்களில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 29 எம்.பி களும் ஓரணியில் நின்றாலே போதும் - மேற்சொன்ன விஷயங்கள் சாத்தியம் தான். அதற்கு கருணாநிதி செய்ய வேண்டியது ஒன்று தான். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகள் அடங்கிய ஒரே மனு. அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு குழு. அதற்கு தலைமையேற்க வேண்டியது எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா. போராட்டத்தை வடிவமைப்பது வைகோ மற்றும் நெடுமாறன். மேற்படி போராட்டத்தில் எடுக்கப்படும் எந்த விதமான முடிவுகளுக்கும் தி.மு.க வின் 18 எம்.பி களும் கட்டுப்படுவார்கள்! இதை கருணாநிதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!

அவ்வளவு தான்(!). இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்கப் பட்டால், மீதமுள்ள தேசிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி களும் போராட்டக்குழுவின் முடிவுகளுக்கு உடன்பட்டாக வேண்டும். அப்படி உடன்படாதவ்ர்கள், அவர்கள் மட்டுமன்றி அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த எவருமே தமிழகத்தில் இனி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத நிலையை உருவாக்க வேண்டியது, வைகோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களின் பொறுப்பு!

இது நடந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருமா? வராதா? -  கண்டிப்பாக வரும். ஆனால் பிரச்சினையே, மேற்சொன்ன மாதிரி ஒரு ஒற்றுமையான சூழ்நிலை உருவாக வேண்டும். அதை உருவாக்கும் பொறுப்பை முன்னெடுக்க வேண்டியது யார்? கருணாநிதியா? வைகோ வகையறாவா? அல்லது பொது மக்களா?

பொது மக்கள் எக்காலத்திலும் இதை முன்னெடுக்க மாட்டார்கள். பின்ன கருணாநிதியா? இப்பிரச்சினை தனக்கு விழும் ஓட்டை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிற போது அவரும் இதை முனெடுக்க மாட்டார். அப்படியானால் இவ்விஷயத்தில் அதிக பிரயத்தனப்படும் வைகோ உள்ளிட்டவர்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும். சாத்வீகமான முறையில் கருணாநிதியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும். வெற்றி கிட்டும் வரை முயல வேண்டும்.

ட்விட்டரில் எழுதுவது, வலைப்பூவில் திட்டுவது - இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் எழுச்சியுற வேண்டும், தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும், எம்.பி களும் ஒன்றிணைய வேண்டும்...!

திஸ்கி: ஏய்... ஏய்... யாரப்பா...?  நல்ல கனவு, திடீர்னு எழுப்பி கெடுத்திட்டியே.. பாவி! ...ஏய் என்ன ஏம்ப்பா திட்டுற? நல்ல கனவுன்னா.. அடிக்கடி இதே மாதிரி கனவு காணு, உனக்கு தெரிஞ்சவங்கள எல்லாம் இதே போல கனவு காண சொல்லு. நெசத்துலயே நடக்காமயா போயிடப் போவுது?!

#tnfisherman இது எப்படி சாத்தியம் ஆனது

#tnfisherman  ஏதோ தொழில்நுட்ப ரீதியில் இந்த வார்த்தையை ட்விட்டர் தளத்தில் இருந்து சேகரிக்கிறது, இதனால் தமிழக மீனவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று நினைத்து நான் www.savetnfisherman.org  இந்த தளத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். இதனால் நான் இந்த ட்விட்டர் விஷயத்தில் கூட பங்கு கொள்ளாமல் இரண்டு நாட்களாக  என் வேலையை கவனித்துக்கொண்டு இருந்தேன்.  ஆனால் இன்று #tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும். இந்த பதிவை படித்தப்பின் எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இது எப்படி சாத்தியம் ஆனது என்று.  தொடர்ந்து சமுதாய விஷயங்களில் மவுனம் சாதித்த வலைப்பதிவர்கள் இன்று தமிழக மீனவர்களுக்காக ஒன்று கூடி இருக்கிறார்கள்.


என்னால் இந்த முயற்சிக்கு முடிந்தவரை  உதவி செய்ய இப்போது தயாராக இருக்கிறேன். இனி #tnfisherman  இந்த குழுவினர் எடுக்கும் ஒவ்வொரு  முடிவுக்கும்  பங்கு கொண்டு போராட இருக்கிறேன்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் www.savetnfisherman.org இந்த தளத்தின் சுட்டியை உங்கள் அனைத்து நண்பர்களுக்கு FACEBOOK, TWITTER, மற்றும் EMAIL வழியாக அனுப்பி தெரியப்படுத்துங்கள். 

WWW.SAVETNFISHERMAN.ORG இந்த தளத்தில் இது வரை FOLLOWER ஆகாதவர்கள் உடனே தன்னை இணைத்துக்கொள்ளுங்கள்.  இந்த போராட்டத்தில் நம் பலத்தை காட்ட இது உதவியாய் இருக்கும்.


இதுவரை பெட்டிஷன் அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள், உங்கள் நண்பர்களையும் இதில் பங்கு பெற செய்யுங்கள்.


 
 
 
 
 

வறிய மீனவர்களின் உயிர்கள் மலிவானவையா?!


திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற கடற்படையினரின் இரு மோதல் படகுகளை விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவு 1995 ஏப்பிரல் மாதத்தில் தாக்கியழித்தது. குறித்த தாக்குதலுடன் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது. எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. அன்று இரவு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்கு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நான்கு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான்கு குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்தலைவர்களை இழந்தன. அந்தக் குடும்பங்களின் சில பிள்ளைகள் கல்வி முன்னெடுப்பை விட்டு, தொழில் செய்ய வேண்டி ஏற்பட்டது.

1990களின் ஆரம்பத்திலிருந்து 2009 மே மாதம் வரையில் வடக்கு- கிழக்கு கடற்பகுதிகளில் தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்து வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு, விடுதலைப் புலிகள் என்ற காரணமும் கூறப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், வடக்கு- கிழக்கு கரையோரங்களில் வாழும் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில் கணவன்மரை, பிள்ளைகளை தொழிலிலுக்கு அனுப்பி பறிகொடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். இலங்கை மோதல்களுக்குள் தங்களுடைய கணவன்மாரை பறிகொடுத்தவர்களில் அதிகமானோர் மீன்பிடி சமூகத்துக்குள்ளேயே இருக்கின்றார்கள்.

கடலில் போராடி தங்களுடைய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் மீனவ சமூகம் இறுதிவரை அதற்க்காக போராட வேண்டியிருக்கிறது. கடல் கொந்தளிப்பு, மழை, சூறாவளி, அதிகாரங்களின் துப்பாக்கிகள் என்று எதனையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மீண்டும் மீண்டும் கடலலைகளுக்கு மத்தியில் போராடி வேண்டியிருக்கிறது.

இதே பரிதவிப்பை தமிழ்நாட்டு மீனவர்களும் 1984களில இருந்து சந்தித்து வருகிறார்கள் என்பது மிகவும் கவலைக்கிடமானது. என்ன இலங்கை மீனவர்கள் சந்தித்த உயிர் இழப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவு அவ்வளவே. எனினும், இதுவரை சுமார் 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இறைமைதங்கிய(?) துப்பாக்கிகளினால் பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்;. மனித உரிமைகள், விழுமியங்கள் பற்றியெல்லாம் இவர்கள் எப்படி வாய் கூசாமல் பேசுகின்றார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. ஆனாலும், வெளியில் பேசிவிடவா முடியும்.

தமிழக சட்ட மன்ற தேர்தல்கள் அண்மித்துள்ள நிலையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றமை அரசியற் தலைவர்களினால் மிகப்பெரிய அளவில் நோக்கப்படுகின்றது. தேர்தல் காலங்கள் வந்தால் தான் எல்லாப் பிரச்சினைகளும் மேடைக்கு வருகின்றன. இல்லாவிட்டால் சில தந்திகள், அறிக்கைகளுடன் அவை கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.

ஆனாலும், தங்களின் வாழ்வாதாரத்தை பெற்றுத் தருபவர்களை இழந்து விட்டு வறிய தமிழக மீனவக் குடும்பங்கள் அல்லற்படுவது தொடர்ந்து வருவதை அனுமதிக்க முடியாது. நலிந்த வடக்கு- கிழக்கு மீனவ சமூகம் சந்தித்து நிற்கின்ற பிரச்சினைகளையே தமிழக மீனவ சமூகமும் சந்தித்து நிற்கின்றது. பெரியண்ணனால், தன்னுடைய தம்பியை கட்டுப்படுத்த முடியவில்லையா? அல்லது அதற்கு முயற்சிக்கவில்லையா?? என்று விளங்கவில்லை.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் (இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர்) நிருபமா ராவ் இலங்கை வந்திருக்கிறார். பேசியிருக்கிறார். அறிக்கைவிடுவார். போய்விடுவார். ஆனால், தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை தடுப்பதற்கான முழு உத்தரவாதத்தை அவரால் வழங்கமுடியுமா??? பதில் அனைவருக்கும் தெரியும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் என்று.

இந்திய பாரிய ரோலர் படகுகளின் அத்துமீறல்.

இலங்கை- இந்திய பாக்கு நீரிணைக் கடற்பகுதியில் தொடர்ந்தும் பிரச்சினை நிலவி வந்திருக்கிறது. ‘கச்சதீவு’ கையளிப்புக்கு முன்னர் இருந்து. அடிப்படையில் 1990களுக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பாரிய படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் இந்திய ரோலர் படகுகள் எந்தவித இடையூறும் இன்றி இலங்கை கடற்பகுதிகளுக்கு வந்து மீன்களை அள்ளிச் சென்றிருக்கின்றன. அதனையே, இப்போதும் செய்ய முனைகின்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் சங்கங்கள் இணைந்து பாரிய ரோலர் இழுவைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதற்கு தடை விதித்தன. எனினும், வல்வெட்டித்துறையில் 17 பாரிய இழுவைப் படகுகள் தொடர்ந்தும் தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, பாரிய இழுவைப் படகுகளைக் கொண்டு மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்குமாறு யாழ்ப்பாண கடற்றொழில் சங்கங்கள் இணைந்து இலங்கை அரசாங்கத்தை கோரின. இதனைக் கருத்திற்கொண்டு பாரிய இழுவைப் படகுகளில் மீனிபிடிப்பதற்கு அரசு தடை விதித்தது.

இது, மீனவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், ஆழம் குறைந்த பாக்கு நீரினைப் பகுதியில் பாரிய ரோலர் இழுவைப் படகுகளின் மூலம் மீன்கள் பிடிக்கப்படும் போது அந்தப் பகுதியிலுள்ள பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன. இதனால், மீன்களுக்கு தேவையான பிளாந்தன்கள் உற்பத்தி தடைப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதியில் மீன்வளம் குறைவடைகின்றன. இதுவே, அதற்கான அடிப்படைக் காரணமாகும்.

எனினும், இந்திய பாரிய ரோலர் இழுவைப் படகுகள் தொடர்ந்தும் இலங்கை மீனவர்களின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றனர். அத்துடன், இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு யாழ்ப்பாண மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் பேச்சுக்கள் அவ்வப் போது நடந்து வருகின்றன. ஆனாலும், அத்துமீறல் தொடர்கின்றன.

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இந்திய ரோலர்களின் அத்துமீறலும் வேறுவேறானவை. இரு விடயங்களும் தனித்தனியாக பேசித்தீர்க்கப்பட வேண்டும். அதனைவிடுத்து, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எளியவர்களின் உயிர்கள் என்னவோ மலிவானவை என்று துப்பாக்கிகள் மட்டுமல்ல, பலரின் புத்திகளும் சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!
 
பதிவர்:

petitiononline தொடர்பான ஒரு விளக்கம் - நீச்சல்காரன்

petitiononline தளத்தில் தயாரித்துள்ள படிவத்தை கையெழுத்திட்டுக் கொண்டிருப்பீர்கள் நன்றி தொடருங்கள்
அதற்கு முன் சில விளக்கங்கள்.

இது எந்த சட்டப் புத்தகத்தையோ வரலாற்று ஆவணத்தை முன்வைத்தோ எழுதப்படவில்லை, சுடப்படும் மீனவர்களைக் கண்டு மன கொதிக்கும் ஒரு சாராசரி மனித மனநிலையில் எழுதப்பட்டது. மேலும் இது மனப் பிரதிப்பளிப்பைத்தான் காட்ட விளைகிறது கூரிய கருத்துக்களைத் தான் பிராதனமாக கொண்டிருக்கும் இதை வைத்து தர்கரீதியாக கேள்விகள் எழுப்பக்கூடாது என நினைக்கிறேன். கடல் வளத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற முறையில் பெட்டிஷன் வடிவமைக்கப்படவில்லை. "//In Our Opinion// {அடுத்த நாட்டு எல்லை இல்லை} சர்வதேச எல்லை கடந்து மீன் பிடிக்க உரிமை வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் "என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதை மீறி இந்த கோரிக்கை இலங்கை மீனவர்களுக்கு எதிரானது என்று தவறான கருத்தை எடுத்துவைத்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்தப் படிவம் petitiononline என்கிற தளத்தில் நாம் தொடங்கிய படிவமே. கையெழுத்தை உறுதி செய்ய விரும்பி அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே, அதில் கோரப்படும் நன்கொடை[donation]க்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நன்கொடைகள் அந்த தளத்திற்கானவை. நன்கொடை தரவிரும்புகிறவர்கள் இந்த தளத்தை பிரபலப்படுத்தலாம்.

இந்தப் படிவம் எந்தளவிற்கு நம்பகமானது என்பதை வைத்துத் தான் இதன் பலமும் உள்ளது. கையோப்பம் இடுபவர்கள் விருப்பமில்லாதவர்களின் பெயர்களை எழுதி அவர்களுக்கு மனவருத்தம் அளிக்க வேண்டாம். உண்மையான ஆதரவு மட்டும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

http://neechalkaran.blogspot.com/

மீனவ நண்பன்

தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........
பதிவர்: சி.பி. செந்தில்குமார்

தமிழக மீனவர்களின் ரத்தக்கண்ணீர்


இலங்கை ராணுவத்தினரின் ரத்தவெறிக்கு தமிழக மீனவரகளின் பலி தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்கள் உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இந்திய அரசு மறந்து விட்டது. பிரான்சு நாட்டில் தன் இனத்தவர்கள் தலை பாகை அணிய தடை விதிக்க பட்டதை கண்டு பொங்கி எழுந்த நமது பாரத பிரதமர், பிரான்சு ஜனாதிபதியிடம் அதை முக்கிய பிரச்ச்னையாக பேசி, தீர்வை காண முயன்றார். ஆனால் இன்று இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் அன்னிய நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்ய படுவதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க நினைக்க கூடவில்லை.

மத்திய அரசு மந்திரி பதவியில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வ காண நினைப்பதையே பாவமாக கருதுகிறார்கள்.தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும், தன் குடும்பத்தினருக்கு பதவி வாங்கவும் வித விதமான சத்தியாகிரக போராட்டங்களை நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் நம் மக்கள் மாண்டு வீழவதை பற்றி கவலை கொள்வதே இல்லை.

இதற்கு தீர்வு தான் என்ன. அரசியல்வாதிகளிடம் ரத்தக்கண்ணீர் விட்டால் தீர்வு கிடைக்காது. மீனவர்கள் தங்கள் சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேர்தலில் காட்ட வேண்டும். ஒரு 50 தொகுதியிலாவது தாங்கள் ஒற்றுமையின் மூலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க முடியும் என்று நிருபித்தால் தான் நீங்கள் சொல்வதை நாளை யாரும் கேட்பார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் பிரச்சனை தீரும் என்று சொல்ல வில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் முடிவு செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். இதற்கு தேவை உங்கள் ஒற்றுமை.

ஏனென்றால் ஆட்சியாளர்கள் காதுக்கு கேட்பது இரண்டு ஓசைகள் மட்டும். ஒன்று நோட்டு. மற்றொன்று ஓட்டு.

மீனவர்கள் பிரச்சனை பற்றி எழுத வேண்டுகோள் விடுத்த பதிவர் செந்தழல் ரவிக்கு நன்றி

பதிவர் - சதுக்க பூதம்

தமிழக மீனவன் - ஃபிளாஷ் விட்ஜெட்


<embed src='https://473441265180385674-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/valaimanaiblog/tnfishermanflash.swf' width='320' height='240' wmode='transparent'/></embed>
<br /> <a href="http://www.savetnfisherman.org/" target="_blank">Save TN Fisherman </a>



குறிப்பு : தங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு கோடிங்கில் இருக்கும் 320 X 240 அளவை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

240 X 180 - 280 X 210 - 360 X 270 - 400 x 300 - 640 X 480 -

பதிவர் சுகுமாரன் சுவாமினாதன்

என் தமிழன்


* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

* அரசியல்வாதி என்னும்
பிணம்தின்னி கழுகின் பின்
சாவமாய்த்திரிந்தான் என் தமிழன்...
அவன் எச்சிக்கையில் ஒட்டி
கிடக்கும் ஓற்றை வார்த்தைக்காய்
ஏங்கி தவித்தான் என் தமிழன்..

* ஈழத்தமிழனைத் தான் காவு
கொடுத்தோம் என்றால்,
எஞ்சிய எம் ஏழை மீனவத்தமிழனையும்
சாவுக்கு தாரைவார்க்கவோ
நாம் தரணியில் பிறந்தோம்?



இதயத்தில் இணைந்திட்டவன் ,
தன் சொந்தத்தின் வாழ்வுக்காய்,
கடல் தேடி சென்றானே!!!
கடலோடு போன தந்தை,
நம்மை கரைசேர்க்க, கரைவருவாரோ
என எதிர்ப்பார்த்து நிற்கும்
எந்தன் தாய்க்கும், தவித்து நிற்கும்
எந்தன் பிள்ளைக்கும
என்ன பதில் நாம் சொல்ல...?
சொல் தமிழா என்ன பதில் நாம் சொல்ல...






* முத்தமிழ் பேசுவோம் ...
எம் தமிழுக்கு செம்மொழி
உயர்வு வாங்கித்தர போர்க்கொடி
நீட்டுவோம்...ஆனால்
என் ஏழைத்தமிழனுக்கோ?

* ஏழைத்தமிழன் என்றால்
அத்துணை இளப்பமா?...
ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
உன்னை ஏற்றிவிட்ட
ஏழைக்கரங்கள் செய்வது அறியாமல்
ஏங்கி நிற்க....எச்சரிக்கை
விடுவதாய் ஏமாற்றுதல் நியாயமா?

* பொறுத்திருந்து பொறுத்திருந்து
நாட்களும் நரகமாக,
எங்கள் வாழ்கையும் வீணானது
தான் மிச்சம்...

* எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட காணி நிலமும்
உங்கள் கைக்குள் இருக்காது..
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான் உன்னிடம் ஏமாறுவோம்..

* பொறுத்தது போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும் பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு தமிழா
நம் தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா.....

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.orgதளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்

இணைய தள முகவரி- http://www.savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- http://twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

குரல் கொடுப்போம்... நம் உரிமையை நாமே பெறுவோம்...நன்றி___________

பதிவர் - ரேவா கவிதைகள்

#tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும்.


#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

நேற்றைய சந்திப்புப் பற்றிய twitlonger
http://www.twitlonger.com/show/8g8uc1

நேற்று நடைபெற்ற கூட்டம் பற்றிய பத்ரியின் பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html

நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

பெட்டிஷன் அனுப்பும் சுட்டி
http://www.petitiononline.com/TNfisher/petition.html
_____________

பதிவர் - கும்மி

'ரம்' காவடி எடுக்கப் போறேன் ரஜினி காந்துக்கு...!

ராஜபக்க்ஷே :

"தமிழ் நாட்டு
மொள்ளமாறி முடிச்சவிக்கைகளையெல்லாம்
என் சட்டைப் பையில் வச்சிருந்தேன்.
டில்லியிலிருக்கிற மூதேவிகளை
பெட்டிக்குள்ளே வச்சிருந்தேன்.
அந்த தைரியத்துல
ஈழத்தை எரிச்சேன்.
ஐனூறு மீனவர்களை
காவு கொடுத்தேன்; ஆனால் -
இந்த பிஸ்கோத்துகள் கிளர்ச்சியால்
எனக்கு வயித்தைக் கலக்குது.
அவங்க ட்வீட்டறதும், ப்ளாக்குறதும்,
ஏசுறதும், பேசுறதும்...!
ஈனமானமுள்ளவன் இனிமேல்
மீனவனைச் சுடுவானா?
அப்புறம், இந்தப் பக்கம் பார்த்தால்
எகிப்த்து;
அந்தப்பக்கம் பார்தால் துனீசியா...
அதனால் எனக்கு
நல்ல புத்தியைக் கொடு
புத்தம் சரணம் கச்சாமி..!"

***

அன்னை சோனியா :

"வேண்டாம் வேண்டாம்
போட்டுத் தள்ளு எனதருமை ராஜபக்ஷே...
மக்கள் ஸ்பெக்ட் ரத்தை மறக்க வேணும்.
நான் இன்னும் இத்தாலிக்கு
மணி ஆர்டர் செய்ய வேணும்.
என் சந்ததிகளும்
கோடானு கோடிகளைப்
பார்க்கவேணும்.
ரோமாபுரிப் போப்பாண்டவா,
உன் முன்னால் மண்டியிட்டு
வேண்டுகிறேன் - அவனை
இன்னும் 500 பேரையாவது
கொன்றுபோட வரம் கொடு..."

***

கருணா நிதி :

"அந்தப் பொம்பளைக்குப் புத்தியில்லை.
அவங்க் சம்பாதிக்க, நான் நாக்கு வழிக்கவா?
எனக்கு சந்ததிகளில்லையா?

என் திருக்குவளைக் குல தெய்வமே
இந்த தள்ளாத வயதிலும்
மஞ்சத் துண்டில் கோவணம் கட்டி
திருமா என்னைத் தோள் பிடிக்க
சேகர்பாபு கால் பிடிக்க
தட்டுத் தடுமாறியாவது
மூணு சுத்து, சுத்தி வாரேன்.
அந்த ராஜபக்சே ரவுடியை
வரப்போகிற தேர்தல் வரையாவது
கொலை செய்வதை தள்ளிப்போட
கொஞ்சம் தந்தி அடித்துச் சொல்லு...!"

***

ஜெயலலிதா :

"ஆடு, மாடு, கோழி வெட்ட தடை என்று
தப்பான சட்டம் போட்டேன் - என்
பன்னாரி மாரியம்மா!
வேப்பிலை ஆடை கட்டி,
வேண்டியவர்களையும் கூட கூட்டி,
அடி மேல் அடி வைத்து,
உன் கோவிலுக்கு நான் வாரேன்.
ஆயிரத்தெட்டு எருமைமாட்டை
(தமிழர்களைக் குறிக்கவில்லை)
காவு தாரேன்.
ஆனது ஆச்சு - இன்னும் ஒரு மூணு மாசம்.
தேர்தல் வரை பொருத்துக் கொள்ளேன்
முத்துமாரி;
தேர்தல் தாண்டி சுட்டுக்கச் சொல்லு
மாகாளி...!"

***

ராமதாஸ் :

"எஞ்சாமீ, முனீஸ்வரா,
ஆட்டுக்கிடா காவுபோட்டு,
கறியுஞ் சோறும் ஆக்கிவச்சி,
சாராயத்த ஊத்திவச்சி
(ஆபத்துக்குப் பாவமில்ல)
படையல் போட்டு வேண்டிக்குறேன் - நான்
அம்மாவோட கூட்டணின்னா,
மீனவனைப் போட்டுத் தள்ளு;
ஐய்யாவோட கூட்டணின்னா
தேர்தல் வரைக்கும் நிப்பாட்டு1"

***

விஜய காந்த்து, வைக்கோ, வெந்தது, வேகாதது :


"திருப்பதி மலையேறி வாரோம்,
சபரிமலை தேடி வாரோம்,
பழனியிலே மொட்டை போட்டு
பஞ்சாமிர்தம் நக்கப்போறோம்.
அதாவது, வந்து, வந்து, வந்து,
மீனவனைக் கொல்லணும் -
ஆனா கொல்லக் கூடாது...!"

***

சினிமா ரசிகர்கள் :

"மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?
நான் -
'ரம்' காவடி எடுக்கப் போறேன்
ரஜினி காந்துக்கு.
அலகு குத்தி போகப்பொறேன்
அஜீத் குமாருக்கு.
வேல் காவடி எடுக்கப் போறேன்
விஜை படத்துக்கு.
முளைப்பாரி தூக்கப் போறேன்
மாறன் படத்துக்கு.
கோயில் கட்டிக் கும்பிடப் போறேன்
நமீதாக் குட்டிக்கு.
மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?"

***

அப்துல் கலாம் :


"நல்ல வேளை -
என் கனவு நினைவான பிறகு
இந்த ராமேஸ்வரம் பிரச்சினை வந்ததே.
இனிமேல் நீ போட்டல் என்ன,
போடலைன்னா என்ன!
ஆனால் மீனவர்களே.........
நீங்கள் கனவு காணுங்கள் -
மீன் களைப் பற்றியல்ல -
உங்கள் உயிரைப் பற்றி...!"

புதிய பாமரன்

Sunday, January 30, 2011

Alternate Perspective #tnfisherman ஒரு பதில்...

மக்கள் வேக வேகமாக ட்விட்டுகளின் வழியாக தங்களின் ஆதங்கத்தை பதிந்து கொண்டிருக்கிறார்கள். நானும் ட்விட்டி கொண்டிருக்கும் பொழுது நம்ம மக்கள் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்னும் அமைப்பின் கீழ் இயங்கும் தளத்தில் ஒரு கட்டுரையை யாரோ எழுதி அங்கு வெளியிட்டுருந்தார்கள்.



அந்த கட்டுரை மிக்க கரிசனத்துடன் ஆரம்பிப்பது போல ஆரம்பித்து எல்லாமே நம்ம தப்பு. இலங்கை கப்பற்படையின் மீது எந்த தப்புமே இல்லங்கிற மாதிரி முழு பூசணிக்காயையும் மறைத்து அவ்வளவு அழகாக எழுதியிருக்கார். படிச்சா, நீங்களும் மனது மாறிட வாய்ப்பு இருக்கு. அந்த கட்டுரையில் சொல்லி இருக்கு விடுதலை புலிகளை இவர்கள் ஒரு காலத்தில் ஆதரித்ததால், இலங்கை இவர்களை வெறுப்பதற்கு எல்லா முகாந்திரமும் இருப்பதாக சப்பையும் கட்டி இருக்கிறார். ஒரு இடத்தில கூட கச்சை தீவை நாம ‘தாரை’ வார்த்துக் கொடுத்திருக்க கூடாதுன்னு ஃபீல் பண்ணவே இல்லை. இன்னும் என்னன்னவோ உளறி கொட்டப்பட்டிருக்கிறது நீங்களே படிச்சிக்கோங்க இங்க...
Alternate Perspective on Tamil Nadu Fishermen issues .
படிச்சவுடன் எனக்கு நியாயமாக தோன்றிய பதிலையும், கேள்வியையும் அங்கயே பதிஞ்சிருக்கேன். என்னுடன் தருமியும் கூடவே இருந்ததால் அவரிடமும் அந்த இணைப்பை கொடுத்து படிக்க வைத்ததின் பெயரில் அவரும் பதில் கொடுத்திருக்கார். இப்போ இருவரின் பதிலையும் இங்கு கொடுக்கிறோம், நீங்க அந்த கட்டுரையை படிச்சிட்டு வாசிச்ச மேட்டர் புரியும். நன்றி!


இது என்னோட பின்னூட்டம் அங்கே இட்டது:


A well written essay with lots of 'bullet' points darted against Indian fisherman interest. So, unregulated, over exploitation of harvest is happening in Indian waters by Tamil fisherman in particular. Therefore, in order to regulate give it to open market so that small scale fisherman can completely be wiped out one day in the future from their only known profession which is fishing for their livelyhood.


Anyway, here is my question - in the first place way before GOI handed down "the Kacchatheevu" to Sri Lanka would they studied the pros and cons of Indian fisherman loss due to signing off the island? Would they hold any general consensus and dialogues with Indian east coast fisherman?


Why is that only our side of population should reduce their needs, lose their lands and yet get blamed with surmounting needs of our own population. I do not understand your foreign policy, with such a huge bulging population of ours we go ahead give away the very little land(the island) we have, however it is also geopolitically strategical hot spot!! Still you are trying to justify where and how strategically failed. I believe we pay a big price geopolitically one day by losing that piece of land! Shame on us!!


இது தருமியோட பின்னூட்டம் அங்கே இட்டது:


I very much consider this post a badly timed one. It tries to side track people from the ISSUE that is being discussed now – it is all about the life and safety of OUR fishermen and NOT on the economic cobwebs between the nations.
The economic and trade affairs talked about in the essay – a very inconvenient place to discuss it here. Actual problem is entirely different. The author very CONVENIENTLY forgets the naked and vulgar truth before us now.

//SL considers them as enemies//

Yes .. It is very natural with the relationships between Tamils and Singhalese. The natural enmity is there for long. Everyone knows it. Present problem is hatched only by this enmity.

//if our fishermen are going to SL borders to catch then its definitely wrong,/

GOOD LOGIC. But how many Singhalese fishermen were arrested/ tortured/ Killed/ maimed by indian coast guard so far? How come on one side you have so much brutality? Are the fishermen of Sri Lanka are saints not entering indian border? And above all, on whose side are you? Are you talking for the 500 plus killed Tamil fishermen or their killers, I wonder?

//“rettai madi valai”?//

No baby on earth would imagine that all these are all due to the “rettai madi valai”

//we also helped LTTE which is legitimate to us but terrorists to SL//

GREAT. You have hit the bull’s eye at last!

//mistake is very much on our side too.//

YES… we have an inefficient govt at the centre and state and many fickle minded people like you among us.

//we can never resolve this problem by a Defense mechanism.//

should we follow our great gandhian dharma??!! Shall we start some SATYAGRAHA?! And our kind-hearted rajapakshae will settle all the problems smoothly!!

இந்தக் கட்டுரையை எழுதியவர் நீரோவிற்கு உறவினரா? வீடு இங்கே தீப்பிடித்து எரிகிறது. இவர் பொருளாதாரம் பேசுகிறார்!

பி.கு: தருமியின் பதிவு இங்கே...470. Alternate Perspective #tnfisherman ... ஒரு பதில்..


Thekkikattan|தெகா

கிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல,தமிழனின் மானம்!!!

எல்லை பாதுகாப்பு என்ற பேரில் சிங்களக் கொலைப்படையும், இந்தியக்கடல்படையும் கூட்டு சேர்ந்து தமிழக மீனவன் உயிரை குடிக்க ஆரம்பித்து 500க்கும் மேற்பட்டோர் தெருநாயைப்போல கடலுக்குள்ளேயே சுடப்பட்டிருக்கின்றனர். மீனவன் எல்லையைத்தாண்டிப்போனதால் சுட்டுக் கொல்லப்படவில்லை, நம் தேசத்து எல்லைக்குள்ளேயே நிராயுதபாணியாக மீன் பிடிக்கையில் அந்த சிங்கள இழிமகன்களால் சுடப்பட்டிருக்கின்றனர். தலைக்கு மேலே சீன இழிமகன்கள் நில எல்லையை அபகரிக்கின்றான்கள். காலடியிலே சிங்கள மதயானைகள் நீர் எல்லையை அபகரிக்கின்றனர். வெட்கமும் துப்பும் கெட்ட மத்திய மாநில அரசுகள் ஊழலில் எத்தனை கோடிகள் கிடைக்கும்? என்றே சதாசர்வகாலமும் சிந்தித்து மும்முறமாக கொள்ளையடிக்கின்றனர். நாசமாப்போக!!!


நூற்றுப்பதினெட்டு கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தில்கொல்லப்பட்ட மீனவர்கள் 500 பேர் என்ன,ஒரு பெரிய தொகையா ? என்று கேட்கலாம், இதே உயிர் மும்பை மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? கேரள மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? கோவா மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? இல்லை ஆந்திர/வங்காள மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? சட்டசபையில் கிழி கிழியென்று இந்நேரம் நாறடித்துக் கிழித்திருப்பார்கள். நன்றாக சிந்தித்துப்பாருங்கள். ஒரு இயக்குனர் பெரும் பாடுபட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று பிணமாய் திரும்புவதை யதார்த்த சினிமாவாக எடுத்திருக்கிறார். அதைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போடும் நம் மாநில அரசு,


மத்திய அரசு என்ன பாராமுகம் காட்டினாலும் என் உயிரா போச்சு என வாயையும் குதத்தையும் பொத்திக்கொண்டிருக்கிறது.வேறு எந்த நாட்டிலாவது தவறு செய்யாத இன்னொரு நாட்டின் குடிமகனை நாயை சுடுவது போல சுடவும்,ஓணானின் கழுத்தை சுருக்கு போடுவது போல இழுத்துச் சென்றும் கொல்ல முடியுமா? ராஜீவ் என்னும் ஒற்றை உயிருக்காக தமிழர்கள் பலரை இன்னும் நாம் எத்தனை நாட்களுக்கு பலிகொடுப்பது? தமிழன் உயிர் தூசல்ல என்று இந்த பதர்களுக்கு காட்டும் நேரம் இது!!!.விஞ்ஞான யுகத்தில் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி ஒன்று திரள்வோம். நீதிக்கு குரல் கொடுப்போம், அங்கே கிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல, தமிழனின் மானம் என்பதை நன்கு புரிந்து கொள்வோம்.

நண்பர்களே!!!உங்களின் தலையான கடமையாக ஐந்து நிமிடம் இதற்காகசெலவிடுங்கள்:-மீனவர் சாவை தடுக்க இந்திய அரசின் கவனஈர்ப்புக்கு கொண்டு செல்லும் இந்த இணைய படிவத்தில் நீங்களும் கையெழுத்திடலாம்.நிறைய கையொப்பம் இடுங்கள். மொத்தம் ஒரு லட்சம் கையொப்பங்கள் வேண்டும் இன்னும் 2000 கூட தேறவில்லை, நான் என் உறவினர்கள் ஐடிகளைப் பயன்படுத்தி 6 கையொப்பம் இட்டேன். வாருங்கள். முடிந்த வரை இந்த செய்தியை உங்கள் இணைய தளத்தில், வலைப்பூவில்,ஃபார்வர்டு மெயில்கள் மூலம் பரப்புங்கள்.
நன்றி!!!நன்றி!!!நன்றி!!!

கீதப்ப்ரியன்

மாற்றங்களுக்கு அவசியமென்றால்

மாற்றங்களுக்கு அவசியமென்றால்
இந்த மனிதர்களுக்கு
புரியமாட்டேனென்கிறது


ஒரு கூலியின் கைகள் போதும்
கடவுளின் தோலுரிப்பதற்கு
கத்திகளெதற்கு


இழுத்துக் கட்ட நூல்கள் கிட்டும்
இஷ்டம் போல
கடவுள் என்பதால்


நெருப்புக்கெல்லாம் தாங்காது
இது கடவுளின் தோல்
சேரி வெயிலில் போட்டு அடித்தாலே
பூமி அதிரும்


கடவுளின் தோலில் செய்த பறை
நிச்சயம் தேவ இசையாயிருக்கும்


மாற்றங்களுக்கு அவசியமென்றால்
இந்த மனிதர்களுக்கு
புரியமாட்டேனென்கிறது


-ராஜ்குமார் ஸ்தபதி (பொருளற்ற சொற்கள்)


http://www.savetnfisherman.org/

http://www.PetitionOnline.com/TNfisher/

உமா

தமிழக மீனவர் பிரச்சினை: ஆராய்ச்சி மணியடிக்கும் டுவிட்டர்!

இருண்ட காலத்தில்
ஒலிக்கும் பாடல்
இருளைப் பற்றியதாகவே இருக்கும்”
இந்தக் கவிதை எவ்வளவு அர்த்தமும், ஆழமும் கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பேச்சும் மூச்சும் தமிழக மீனவர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. துயரத்தையும், வலையையும் மீறிய வார்த்தைகள் திமிறி வந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தில் தமிழ் எழுத்துக்கள் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றன. வலைப்பக்கங்களிலும், டுவிட்டரிலும் தங்கள் கருத்துக்களால் ஒரு புயலை மையம் கொள்ள வைத்திருக்கின்றனர். ‘நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என ஆர்ப்பரிப்பாய் நிற்கிறார்கள்.

இவை ஜெயக்குமார் என்னும் ஒரு மனிதனின் கடைசி மூச்சிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது கொந்தளிப்பான மனநிலை என்று குறுக்கிப் பார்த்துவிட முடியாது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் மரண ஓலங்கள் கேட்டுக் கேட்டு பொறுமை காத்தவர்கள்தான் இப்போது மௌனத்தைக் கலைத்து வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களும், அரசுகளும் இதற்கொரு முடிவு கட்டுவார்கள் என வைத்திருந்த நம்பிக்கைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடையாளங்களே இவை.

இந்த மண்ணில் பிறந்தவன், தங்களோடு வாழ்ந்தவன், ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அமைப்பில் என்ன இடம் என்பதைக் கவனிக்க முடிந்ததில் எழுந்த வேகம் இது. பிழைப்பு தேடிச் சென்றவனை ஒரு புழு பூச்சியைக் கொல்வது போல, அண்டை தேசத்தின் இராணுவம் கொல்லும்போதும் வேடிக்கைப் பார்க்கிற தன் ராஜாக்களை ‘என்ன மயித்தப் புடுங்குறீங்க’ என்று சாதாரணமானவர்களும் அசாதாரணமாகக் கேட்கவே செய்வார்கள். தங்கள் ராஜாக்களின் மௌனங்களுக்குள் நுரைத்துக் கிடக்கும் சுயநலங்களை அறிந்து, முகம் சுளித்து, ‘கேடு கெட்டவர்களே, விலகிப் போங்கள்’ என முழக்கமிடத்தான் செய்வார்கள்.

இந்த வெற்று இரைச்சல்களால், என்ன செய்துவிட முடியுமென அவர்கள் நினைக்கலாம். இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் கொட்டித் தீர்த்துவிட்டு, பிறகு தத்தம் வீடு, தத்தம் வாழ்க்கைக்குள் புகுந்துகொள்கிற ஆமைகளாகிப் போவார்கள் என அவர்கள் காத்திருக்கலாம். சில வசனங்கள், சில இலவசங்கள், சில காரணங்கள் போதும் இந்த அற்பர்களைச் சமாளிக்க என்று அவர்கள் நப்பாசை கொள்ளலாம். கடந்தகாலங்கள் இப்படித்தானே இருந்திருக்கின்றன என்று கணக்கும் போடலாம். மக்களைப் பற்றி அதிகார பீடங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் வேறெதுவுமாய் இருந்துவிட முடியாதுதான். எல்லோருடைய காலடியோசைகளையும் அறிய முடிந்த திருதராஷ்டிரன், காலத்தின் காலடியோசையை அறிய முடியாமல் இருந்தான் என்பதும் ஒரு உண்மைதான்.

டுவிட்டரில் இப்போது அந்தக் காலடியோசை கேட்டுக்கொண்டு இருக்கிறது! அலைகளென பொங்கி வரும் டுவிட்டர்கள் சொல்லும் செய்திகள் முக்கியமானவையாய் இருக்கின்றன.

நடக்கும் துயரங்களைப் பார்த்துக்கொண்டு நாங்கள் மௌனமாயிருக்க மாட்டோம். பொது விஷயத்தில் ஒன்று கூடி நிற்போம். பொதுக்கருத்தை உருவாக்க உரையாடுவோம்.மக்களுக்கெதிரான அரசுக்கும், அமைப்புக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக கேள்விகள் எழுப்புவோம்.ரசிக்கிற, நேசிக்கிற நடிகரோ, எழுத்தாளரோ, எப்பேர்ப்பட்டவரோ இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் மௌனம் காப்பதை அம்பலப்டுத்துவோம். ஊடகங்களின் அரசியலையும், உள்நோக்கங்களையும் தோலுரிப்போம். மேலும் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது என அணி திரள்வோம்.நண்பர்களே!
டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக ஆராய்ச்சி மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அரியாசனங்கள் அதிரட்டும்!

(தமிழக மீனவர்களை பாதுகாக்க எழுப்பும் குரலாக, இந்த லிங்க்கில் உள்ள பெட்டிஷனில் இன்னும் கையெழுத்திடாதவர்கள், கையெழுத்திடுங்களேன்:
Save Tamilnadu Fishermen Petition )

மாதவராஜ்

மீனவர்களுக்காக ஒரு கையெழுத்து

January 29, 2011மீனவர்களுக்காக ஒரு கையெழுத்து
”பீடி சிகரெட் சுருட்டு ஒண்ணும் கூடாதுமா... பாட்டில் கீட்டில் பாத்தேன் உடனே பாக்-அப் பண்ணிருவேன். ஈவ்னிங் எட்டரைக்கு மெஸ்ஸுக்கு போயிரு. ஒம்பதே காலுக்கு ஆல்-லைட்ஸ் அவுட். பாரக் (barrack) விட்டு வெளிலப் போவக் கூடாது யாரும்.”

வாட்சைக் காட்டி பேசிக் கொண்டிருந்த ஏழுமலையை இடைமறித்து மோகன் பிள்ளை,

“லைட்-அவுட் பின்னால குவார்ட்டர் கார்ட் (Quarther Guard) வாசல்ல யார் போனாலும் ஷூட்டிங் பண்ணிரும். கபர்தார்” என்றுக் கொச்சைத் தமிழில் சொன்னார்.

கல்லூரிக் காலத்தில், செகந்திராபாத் AOCல் ஆர்மியோடு இணைந்த NCC காம்ப் போயிருந்த போது கேட்ட முத்ல் நாள் அறிவுரைகள். குவார்ட்டர் கார்ட் என்பது ஒரு ஆர்மி காம்பின் அதி சென்ஸிடிவ்வான ஆயுதக்கிடங்கு.

மொத்தம் 12 நாள் காம்ப்பில் பத்தாவது நாள் ஞாயிற்றுகிழமை ஊர் சுற்றிப் பாருங்கள் என்று அனுமதி கொடுத்திருந்தார்கள். காக்கி சட்டைகளை கழட்டிப் போட்டுவிட்டு ஆந்திர தட்ப்வெப்பத்திற்கு ஏற்ற பளீர் கலர் பனியன்களைப் போட்டுக் கொண்டு அடாசு அலுமினிய பஸ்களில் ஏறி அண்டை நகரமான ஹைதராபாத்திற்கு சந்தோஷமாகப் போனோம். ஹுசைன் சாகர் ஏரி, பிர்லா மந்திர், சாலர்ஜங் மியூசியம், கோல்கொண்டா கோட்டை என்று சுற்றிப் பார்த்துவிட்டு பிர்லா சயினஸ் மியூசியம் வரும்போதே ஏழு மணி ஆகிவிட்டது. அவசரகதியில் சுற்றிப் பார்த்துவிட்டு வாயேஜர் சுற்றுலாவையெல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு அதே அடாசு வண்டிகளில் AOC திரும்பும்போது ஸ்டாப்பிங் தவறவிட்டுவிட்டோம். அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வியர்க்க விறுவிறுக்க கேம்பிற்கு மீளும்போது மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது.

குவார்ட்டர் கார்ட வாசலோடு போனால் முட்டிப் போட்டு ரைஃபிளால் குறிபார்த்து முழங்காலோடு சுட்டுவிடுவார்கள் என்று பீதியில் மாற்றுவழியில் போகலாம் என்றால் ஒரு சிக்கல். குவார்ட்டர் கார்ட் எந்த திசையில் இருக்கிறது என்றுத் தெரியவில்லை. குமரேசன் தெற்கே கைகாட்டினால் சர்தார் சிங் (கோயம்புத்தூர்காரன்) வடக்கே கைகாட்டுகிறான். நாகர்கோவில் வசந்தன் கண்ணெல்லாம் நீர் திரள உயிரோடு பேரக்கிற்கு மீண்டால் வேளங்கண்ணி போய் மொட்டைப் போட்டுக் கொள்ள வேண்டிக் கொள்கிறான். சட்டைப் பையில் குலுங்கும் நாணயங்களையும் கூடவே குதிக்கும் இதயத்தையும் ஒருசேரக் கையால் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடினேன். காதை தீய்த்துக் கொண்டு சிவப்பு பொறி முன்னேப் பறக்க... அய்யோ... என்று திரும்பிப் பார்த்தால் ஜெயராஜ்தான் சிகரெட்டை சுண்டி விட்டிருக்கிறார்ன். அடப்பாவி... இன்னும் நாலு இழுப்புக்கு மேலே இருந்திருக்குமே அதில. ஒருவழியாக பேரக்கிற்கு மீண்டாலும் இரவெல்லாம் துப்பாக்கி வெடிப்பது போல கனவு வந்து வந்து போனது.

கேம்ப் டே (Camp Day) அன்று எங்களுக்கு பொறுப்பாளரான AOCன் மேஜர் மூர்த்தியோடு பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது இந்த சம்பவத்தை விளையாட்டாக விவரித்தோம். வழிதவறி வாசலோடு போகிற கல்லூரி மாணவர்களை எல்லாமா சுடுவார்கள் என்று சிரித்தார். ஆனால் ஆடு மாடு ஏதாவது வழி தவறி வந்தால் காலிதான். யார் கேள்விக் கேட்கப் போகிறார்கள் என்றார் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே.

உண்மைதான். கேள்வி கேட்பதில் நாம் கொஞ்சம் பின்தங்கித்தான் விட்டோம். தமிழகத்தின் தெற்கெல்லையில் கடலுக்குள் செல்லும் மீனவர்களை Maritime எல்லையை அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படை சுடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. "அது சிக்கலான விவகாரம்”. என்று ஒரு உயர் அரசியல் தலைவர் சொன்னாராம். சரிதான். எந்தவித சிக்கல்களுக்கும் எளிதான் தீர்வு கொலை அல்லவே. நிச்சயமாக இல்லை. நாடுகளுக்கு எல்லைகள் உண்டு. மனிதநேயத்திற்கு எல்லைகள் ஏது?

இலங்கை அரசு ‘இனி சுடுவதில்லை’ என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தோடு இது நின்றுவிடக் கூடிய பிரச்னை இல்லை. இனி இந்த Maritime எல்லைப் பற்றிய பிரச்னையில் இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை திட்டவட்டமாக தெரியபடுத்த வேண்டும். கேட்பாரற்ற அஃறிணைகள் போல மனிதர்கள் மாண்டு போகாமல் இருக்க இந்திய அரசாங்கமும் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கான சட்டதிட்டங்கள், வரைமுறைகள், மனிதநேய நடைமுறைகள்... இன்னபிற எல்லாமே ஏற்கெனவே இருப்பதுதான். அவை சரியானப்டி அமலாக்கப்படாததுதான் சிக்கல்.

இணையத்தில் பெரும் குரலாக 'தமிழக மீனவனைக் காப்பாற்று’ என்னும் கோஷம் எழுப்பபடுவதை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. tnfisherman என்ற Tag போட்டு ஆயிரகணக்கான கீச்சுகள் (tweets) போடப்பட்டு இந்திய அளவில் கவனம் பெற்ற ட்விட்டர் ட்ரெண்டாக உருப்பெறத் தொடங்கியிருக்கிறது. செய்தி ஊடகங்களின் கவனமும் மீனவர்களின் பிரச்னைபாற் திரும்பியிருப்பது நல்ல விஷயமே.

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கான ஆதரவுக் குரல் இணையத்தில் நீட்டித்து ஒலிக்க இந்தக் கையெழுத்து வேட்டையிலும் பங்குபெற வேண்டுகிறேன். பெரிய பாறைகளுக்கு இடையே சிறு கூழாங்கற்களை நிரப்பும் அணிற்பிள்ளைகள் போல...

Save TN Fisherman Petition online

Save TN Fisherman கீச்சுகள்

Save TN Fishermen தளம் - இந்திய நேவி கமாண்டர் பேட்டி

ஸ்ரீதர் நாராயணன்

மீனவர்களுக்காக கலைமாமணியை புறக்கணிக்க வேண்டுவோம்!

ஏதோ சில தகவல்களை அவ்வப்போது கீச்சிக்கொண்டிருந்த தமிழ் ட்விட்டர் தளம் ஒருமித்த ஓங்கிய குரலாக மீனவர்களுக்காக கொதித்தெழுந்து குமுறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலில் இதுவரை சிங்களப் பேரினவாதத்தினால் செத்துப்போன பாவப்பட்ட மீனவனின் ஆத்மா ஒரு துளியேனும் அமைதியை நோக்கித் திரும்பும்.


இது மட்டும் போதுமா?


விவசாயிகளையும் மீனவர்களையும் போற்றாத சமூகம் உருப்படவா போகிறது. சமூகம் என்பது அரசுகளையும் சேர்த்துத்தானே! எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளாக மாற்றிடத் துடிக்கும் அரசுகளுக்கு வயிற்றுப் பசிபோக்கும் விவசாயிகளையும், மீனவர்களையும் காண ஏது நேரம்? முப்பது சதவிகித உணவுத்தேவையை மீனவர்கள் பூர்த்திசெய்வதும், பெருமளவினான பொருளாதாரத்தையும் மீனவர்கள் ஈட்டித் தருவதும் ஏனோ அவர்களின் கவுச்சி வாடை தாண்டி அரசாங்கங்களுக்கு எப்போதுமே தெரியவருவதில்லை!


இணைய முழக்கம் ”ஆங்கோர் காட்டிலொரு பொந்திடை வைத்த நெருப்பாக பரவிக்கொண்டிருப்பதை” அரசுகளும், சோரம் போன ஊடகங்களும் கவனிக்காமலா இருக்கும், இருந்தாலும் மனிதர்களின் மறதிமேல் இருக்கும் அபார நம்பிக்கை, இந்த இணையப் புரட்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்று மெத்தனமாக கள்ள மௌனம் காக்க வைக்கின்றது.
சாவுகளுக்கு கடிதம் மட்டும் எழுதத் தெரிந்த முதல்வருக்கு அமைச்சரவை இடங்களுக்கும், தொகுதிப் பங்கீடுகளுக்கும் மட்டும் டெல்லிக்கு டிக்கெட் போடத் தெரிகிறது. இதுவரை மீனவர்களின் மரணம் கண்ணுக்குத் தெரியாத ஜெயலலிதா அம்மையாருக்கு தேர்தல் காய்ச்சல் இறந்தவனின் பெண்டாட்டியை இறுக கட்டி அணைத்துக்கொள்ள வைக்கிறது.


நித்தியானந்தாவின் உள்ளாடை வரை பல கோணங்களில் காட்டத் தெரிந்த ஊடகங்களுக்கு மீனவன் மரணம் ஒரு முறைச் செய்தியாக மட்டுமே மாறும் அவலம் கேடுகெட்ட தமிழ் தேசத்தில் மட்டுமே நிகழும் அதிசயம்.. அதையெல்லாம் முறித்தெறிய புறப்பட்டிருக்கும் இணையத் தோழர்களுக்கு கோடி வந்தனங்கள்… அதே சமயம் இந்த கீச்சுகள் மட்டும் போதுமா.. அருமையானதொரு வாய்ப்பை அரசே அளித்திருக்கிறது…
ஆமாம் கொலை செய்யப்பட்டவன் இரத்தம் காயும் முன்னே கலைமாமணி விருது வழங்கிட ஆட்டம் பாட்டமும் ஒத்திகை ஆரம்பித்துவிட்டது. விருதுப் பட்டியல் மலைப்பையு,ம் மானங்கெட்ட தனத்தையும் ஒருங்கே அள்ளி வீசியிருக்கிறது. அதில் சிலருக்கு தகுதிக்காக விருது கிடைத்திருக்கலாம், சிலருக்கு விலையாக கிடைத்திருக்கலாம்.


அடுத்தடுத்த பத்து நாட்களில் மீனவர்கள் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக சிங்களப் பேரினவாதத்தினால் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க இந்திய அரசும், தமிழக அரசும் கடிதங்களையும் தூதர்களையும் அனுப்பவதோடு தங்கள் கூட்டணியை பலப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.


விருதுபோல் சிங்களன் கழுத்தில் கையிறு வீசிக் கொன்ற மீனவனின் நினைவாக இந்த ஆண்டு இந்த விருதினைப் புறக்கணிக்கிறேன் என்ற துணிச்சல், மனிதாபிமானம் உங்களுக்கு இருக்கிறதா? இதோ மீனவனின் உலராத ரத்தத்தின் முன் உங்களிடம் மன்றாடி வேண்டுவது, சிங்களப் பேரினவாதம் இந்தியன் மேல் நிகழ்த்தும் இனப்படுகொலையைத் தடுக்காத, கண்டுகொள்ளாத இந்த அரசுகளுக்கெதிரான கலைமாமணி விருதுகளை புறக்கணிக்க கீழ்க் கண்டவர்களை அன்பாக வேண்டுவோம், மன்றாடுவோம், அழுத்தம் கொடுப்போம்…


விருதுக்கு தகுதியான படைப்பாளிகளுக்கு அந்த விழாவும், கழுத்தில் விழும் மடலும் ஒரு பொருட்டா என்ன?


2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட்டியம்), காயத்ரி சங்கரன் (கர்நாடக இசை), வே. நாராயணப் பெருமாள் (கர்நாடக இசை), எம்.வி. சண்முகம் (இசைக் கலைஞர்), இளசை சுந்தரம் (இயற்றமிழ் கலைஞர்), பி. லெட்சுமி நரசிம்மன் (தவில் கலைஞர்), திருமாந்திரை காளிதாஸ், (நாதஸ்வரக் கலைஞர்), பிரேமா ஜெகதீசன் (நாட்டியம்), ரோபோ சங்கர் (சின்னத்திரை கலைஞர்), நாமக்கல் வேணுகோபால் (கிளாரிநெட்), திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்), கவிக்கொண்டல் செங்குட்டுவன் (இயற்றமிழ் கலைஞர்), ச. சுஜாதா (நாட்டியம்) ராணி மைந்தன் (இயற்றமிழ் கலைஞர்), ஜி.கே. இராமஜெயம் (ஓவியக் கலைஞர்) கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் (இயற்றமிழ் கலைஞர்), தஞ்சை சுபாஷினி, ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்), சி.வி. ரமேஸ்வர சர்மா (சமையல் கலைஞர்), திருமுருகன் (சின்னத்திரை இயக்குநர்), பரத்வாஜ் (இசையமைப்பாளர்), ராஜீவ் மேனன் (ஒளிப்பதிவாளர்), சிற்பி குட்டப்பன் நாயர் (சிற்பக் கலைஞர்), தோஹா பேங்க் சீதாராமன் (பண்பாட்டுக் கலை பரப்புனர்), என். எதிராசன் (கலைப் பரப்புனர்), கருணாஸ் (நகைச்சுவை நடிகர்).

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை), சேக்கிழார் (சின்னத்திரை வசனகர்த்தா), சாக்ஷி சிவா (சின்னத்திரை நடிகர்), மாளவிகா (சின்னத்திரை நடிகை), பூவிலங்கு மோகன் (சின்னத்திரை நடிகர்), எஸ். முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்), பி. முருகேஸ்வரி (கரகாட்டக் கலைஞர்), ரேவதி சங்கரன் (சின்னத்திரை நடிகை), தஞ்சை சின்னப்பொன்னு குமார் (கிராமியப் பாடகர்), எல். ஜான்பாவா (சிலம்பாட்டக் கலைஞர்), ரேவதி (வில்லுப்பாட்டுக் கலைஞர்), கே. கருப்பண்ணன் (ஒயிலாட்டக் கலைஞர்), கே.ஏ. பாண்டியன் (நையாண்டிமேளக் கலைஞர்), எம். திருச்செல்வம் (நையாண்டிமேளக் கலைஞர்), சிவகங்கை வி. நாகு (நையாண்டிமேளக் கலைஞர்), டி. சேகர் (கிராமியக் கருவி இசைக் கலைஞர்), மு. இளங்கோவன் (கிராமியக் கலை பயிற்றுனர்), சா. கந்தசாமி (இயற்றமிழ்), ராஜேஷ் குமார் (இயற்றமிழ்), நாஞ்சில் நாடன் (இயற்றமிழ்), ரோகிணி (குணச் சித்திர நடிகை), சரண்யா (குணச் சித்திர நடிகை), சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்).


2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்), பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ. லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன் (சமயச் சொற்பொழிவாளர்), தேச. மங்கையர்க்கரசி (சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபாலகிருஷ்ணன் (இசை ஆசிரியர்), கே. என். சசிகிரண் (குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத் (வயலின் கலைஞர்), ஐ. சிவக்குமார் (மிருதங்க ஆசிரியர்), என்.எஸ். ராஜம் (மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன் (வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா (வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன் (புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம் (புல்லாங்குழல்), டாக்டர் தி. சுரேஷ் சிவன் (தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன் (மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன் (நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம் (தவில் கலைஞர்), ஏ.ஹேம்நாத் (பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி (நாடகக் கலைஞர்), எப். சூசை மாணிக்கம் (நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை).


இந்தப் பட்டியலில் இருப்போரை முடிந்தவரை தொடர்பு கொண்டு இந்த நெருப்பை விளக்காக ஏற்றுவோம். நிச்சயம் ஒளி பிறக்கும்.


இவர்களில் ஒருவர் புறக்கணிக்க துணிந்தாலும், அது இணைய ட்விட்டர் தீயினை தமிழகத்தின் எட்டுத்திக்கிலும் இருக்கும் மனிதர்களின் நெஞ்சத்தில் ஏற்றிவைக்கும்.


வலைவீசும் மீனவனுக்காக, வலை உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், உலகத்தமிழர்களை ஒன்றுபடுத்தி குரலை உயர்த்துவோம்


ஈரோடு கதிர்

தரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்

இது கற்பனை தான் என்றாலும் நிஜத்தின் சாயல் சற்றே தெரிவதற்கு நான் பொறுப்பல்ல)


உடன்பிறப்பே!



தமிழக மீனவர்கள் வாடிக்கையாக இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவது நாடறிந்த சேதி. நீயும் அறிந்திருப்பாய். இதற்கு நான் எதுவும் செய்யாதிருக்கிறேன் என்று விரல் நீட்டுவோரில் கொடநாட்டுக் கோமகள் முதன்மையானவர் என்பது குறித்து நான் கவலையே படமாட்டேன். என்னைக் காமராசர் எதிர்த்தார், ராஜாஜி எதிர்த்தார், இந்திராகாந்தி எதிர்த்தார். எனது நண்பர் எம்ஜிஆரும் 1987ல் மறையும் வரை இதைத்தானே செய்தார். எதிர்ப்புகள் எனக்குப் புதிதல்ல.



ஆனால் தமிழ்நாட்டில் வரும் பத்திரிகைகள் சில ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி என் மீது சேறு வாரி இறைக்கின்றன. பொதுவானவர்கள் என்று நான் நம்பும் மக்களில் பலரும் கச்சத்தீவு போனது முதல் ஜெயக்குமார் மரணம் வரை கருணாநிதியே காரணம் என்று பேசுகிறார்கள். இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. நான் எது செய்தாலும் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

அச்சு எந்திரம் பிரபலமாவதற்கு முன்பே முரசொலி நடத்தியவன் நான். அண்ணாவும் பெரியாரும் அதுகண்டு இறும்பூது எய்தி என்னைப் பாராட்டினர் என்று பெருமையில் மார்தட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. அந்தப் பெருமக்களும் விரும்பிப்படித்த பத்திரிகை முரசொலி என்ற வரலாற்றை நீ நன்கறிய வேண்டும என்பதற்காகவே இதைச் சொன்னேன்.

வங்காளிகள் விரும்பி உண்ணும் உணவு மீன் என்பதாலேயே ஜித்தன் பானர்ஜியை குடும்பத்தோடு சென்னையிலே இருத்தி வைத்து மீனவர்களுக்கு நிலையான பிழைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஏவிஎம் செட்டியாரிடம் நான் வாதாடியதை அவர் நேற்றுகூட என் கனவில் வந்து மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு மீனவர்களிடம் பாசம் கொண்டவன் இந்தக் கருணாநிதி.

காஷ்மீரப் பார்ப்பனர்கள் மீன் உண்பார்கள் என்பதால் இந்திரா காந்தியை எத்தனை முறை நான் ஆதரித்தேன் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருப்பதைப் படித்தவர்களுக்குப் புரியும். நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜி எனக்கு உற்ற நண்பரானதே வங்கத்துப் பார்ப்பனர்களும் மீன் உண்பார்கள் என்பதால் தானே! இவ்வளவு இருந்தும் கருணாநிதி மீனவர்களுக்கு எதிரி என்று பேசுவதில் ஆரிய மாயை அளப்பரிய இன்பம் பெறுகிறது என்றால் அதன் நச்சுத்தன்மை எத்தகையது என்று புரிந்து கொள்!

அருமை நண்பர் எம்ஜிஆர் முதல்வரானபின் நடிக்கக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் மீனவநண்பன் என்ற படத்துக்கு சிறு இடையூறும் வர விடவில்லை நான் என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இன்று சில மீனவர்களின் மகிழத்தகாத மரணத்துக்காக என்னை ஏகடியம் செய்வோரை எதிர்காலம் எள்ளி நகையாடும். வரலாறும் வசைபாடும்.

குமரி மாவட்டம் நீரில் மூழ்கியபோது அரசு எந்திரம் மெத்தனமாகச் செயல்பட்டது என்று குறை கூறுவோர், "சற்றே தாமதித்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்த நீரில் உள்ள மீன்களை மீனவர்கள் பிடித்து விற்றுப் பிழைப்பதற்கு பங்கம் வரக்கூடாது" என்ற என் ஆணையை அறிய மாட்டார்கள். தாமதத்திற்குப் பின்னால் உள்ள உண்மைக் காரணத்தை எடுத்துக்கூறி விளம்பரம் தேடவேண்டாம் என்றிருந்தேன். சொல்லவேண்டிய கட்டாயத்தால் சொல்கிறேன். இதை வெளியே சொல்வதும் சொல்லாததும் உன் விருப்பம்.

ஏலகிரியில் ஓய்வெடுக்கச் சென்ற போது கூட ஏரியிலே பிடித்த மீனை வாங்கி உடன் வந்த கட்சியினருக்கு ஊட்டி மகிழ்ந்தவன் இந்தக் கருணாநிதி என்ற உண்மையை நீ அறியமாட்டாய்! எவ்வளவு மீன்களை அங்கிருந்து எடுத்து வந்து இங்கிருக்கும் உடன்பிறப்புக்ளுக்குத் தந்தேன் தெரியுமா? உடன்பிறப்புகளுக்கு ஏரிமீன் வழங்கும் விழா எடுத்துவிடலாம் என்று உடனிருப்போர் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். உனக்குத் தெரியுமே எனக்குதான் விளம்பரம் பிடிக்காது என்று.

விலைவாசி உயர்வு என்று நேரு காலத்திலிருந்து நடக்கும் செயலுக்கும் கருணாநிதியே மூலகாரணம் என்று கொடுநெஞ்சம் கொண்டோர் குற்றம் சாட்டினர். ஆனால் அப்போதும் மீன் விலை கட்டுபடியாகும் நிலையில் தான் இருந்தது என்று நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் நான் சொல்லவில்லையே என்று நீ வருந்தக்கூடாது என்பதால் சொன்னேன்.


சமீபத்தில் தம்பி ஜெயக்குமார் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வருந்தத்தக்க வகையில் மாண்டார் என்று கேட்டதும் நான் அடைந்த துயரத்தைச் நாட்டுக்குச் சொல்ல விம்மி அழுதபடியே நெஞ்சுக்குநீதி முதல் தொல்காப்பிய உரை வரை, பராசக்தி வசனம் முதல் இளைஞன் வசனம் வரை தேடிப் பார்த்துவிட்டேன். வார்த்தைகள் கிட்டவில்லை.

அதிகம் அழுவது உடல் நலனுக்கு ஆகாது என்று மருத்துவர்கள் சொன்னதால் அல்ல, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னால் தாங்க முடியாது என்பதாலும், தமிழனை அநாதையாக ஆக்கிவிடத் துணிந்தாயே என்று வள்ளுவப் பெருந்தகை முதல் பேரறிஞர் அண்ணா வரை கோபிப்பார்களே என்பதாலும் அழுகையை நிறுத்திவிட்டேன்.


இணையமெனும் கணினி வலையில் கல்வி முதல் கலவி வரை செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்துப் பார்த்துப் பயன் பெறுவதை விரும்பவில்லை பார்ப்பனீய சக்திகள். அதனையும் கருணாநிதியைக் குறை சொல்லப் பயன்படுத்துகிறார்கள் இந்த ஆரியக் கூத்தாடிகள். ராஜாஜி காலத்திலும், காமராசர் காலத்திலும், பக்தவத்சலம் காலத்திலும் மீனவர்கள் சாகாவரம் பெற்றா இருந்தார்கள் என்று கேட்டால் பதிலில்லை புல்லர்களிடம்.

கடலே வற்றிப் போனாலும் கையசைப்பில் ஒரு குளமோ குட்டையோ வரவழைக்க வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே சாயிபாபாவை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தவன் நான். குளமோ குட்டையோ இருந்தாலும் மீன் பிடிக்க ஆகுமே என்ற என் நல்ல எண்ணம் அம்மையாரின் அடிவருடிகளுக்குப் புரிந்தாலும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். பகுத்தறிவாளன் இதை எப்படி நம்பலாம் என்று கேட்கிறது பெரியாரையே பழிக்கும் பார்ப்பனீயம். அவரையே பழித்தது என்னை விட்டா வைக்கும்?

இதுவரை மீனவர்கள் மாண்ட போதெல்லாம் தரையிலிட்ட மீனாகத் துடித்தவன் கருணாநிதி என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகு அறியும். நீயும் அறிவாய். அது போதும் எனக்கு. எத்தனை கடிதங்கள்? எத்தனை சந்திப்புகள்? எத்தனை பேச்சுக்கள்? எத்தனை வருத்தங்கள்? எத்தனை கண்டனங்கள்? எத்தனை அறிக்கைகள்? இவ்வளவுக்குப் பிறகும் சும்மா இருக்கிறான் என்கிறார்களே? இது மார்பின் குறுக்கே நூலிட்டுக் குறுக்குசால் ஓட்டாதவன் நான் என்பதால் தானே?

என் ஜாதகமே அப்படித்தான். ஏச்சுக்கும் ஏகடியத்துக்கும் மட்டுமே இவன் என்று ஆதிக்கச் சக்திகள் ஒரு முடிவோடு செயல்படுகின்றன. ஜாதகத்தை நம்புகிறாயா என்று உடனே கேட்பார்கள். இப்படிக் கேட்பவர்களுக்குப் பதில் சொல்லி லாவணி பாட எனக்கு விருப்பமில்லை. நீ விரும்பினால் எசப்பாட்டு பாடிக்கொள். நான் தடுக்க மாட்டேன். இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நான் ஜாதகத்தை நம்பவில்லை. நம்புவோரைத் தடுக்கவும் இல்லை. நேரம் சரியில்லை எனக்கு. வேறென்ன சொல்ல!

இவ்வளவுக்குப் பிறகும் நான் செயல்படாமல் சும்மா இருக்கிறேன் என்று சீண்டும் சின்னப் புத்திக்காரர்களிடம் எப்படிப் பொறுமையாக இருப்பது என்று நீ துடிப்பது புரிகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்ற முதுமொழியை மெய்ப்பிக்கிறேன் என்று சங்கத்தமிழ்ப் புலவர் பெருமக்களுக்கு நான் கொடுத்த வாக்கு என் கோபத்தைக் கட்டிப் போட்டிருக்கிறது. பூமியாள்வோர் பொறுத்தே ஆகவேண்டும் என்று சாலமன் பாப்பையா வேறு விளக்கம் தந்து என் கைகளைக் கட்டிப் போடுகிறார்!

இதற்கு மேலும் இது பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் வெட்டி வேலை. இதிலெல்லாம் கவனத்தைச் சிதற விடாதே, நேரத்தை விரயமாக்காதே. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றி என்பது தவிர வேறெதிலும் உன் கவனம் செல்வது இப்போது மட்டுமல்ல எப்போதுமே நன்மை பயக்காது.

தேடாமல் சோறு, உழைக்காமல் காசு என்ற உன்னதமான வாழ்வு தமிழனுக்கு பல்லாயிரத்தாண்டுகள் தொடர வேண்டுமானால் தேர்தலுக்குத் தேர்தல் நீ அயராது பாடுபட்டு வெற்றிக்கனி பறிக்கவேண்டும். தேர்தல் வெற்றியை யாரும் இலவசமாகத் தருவதில்லை. ஆகவே உடன்பிறப்பே தேர்தலில் உழைக்கத் தயாராகிக்கொள்!


அன்புடன்,
மு.க.

Arun Ambie

மீன் இனம் இருக்கும் எம் மீனவர் இனம்?

ஏய்த்து பிழைப்பவருமல்ல....
எத்தருமல்ல....
சோம்பி திரிபவர் அல்ல - அவர்
சொர்கம் வேண்டி அழுபவருமல்ல
அன்றாடம் காய்ச்சி அவர்
அண்டிப்பிழைப்பவரல்ல
மண்டியிட்டு தொழுத தெய்வமும்
மார்பில் அடித்து அழச் செய்வதேனோ?

கோடியை சேர்க்க போகிறாரா?
கொள்ளையடிக்கத் தான் போகிறாரா?
சிங்கள கொடுங்கோலனே!!!
ஒரு இனத்தை அழித்து பருகியபின்னும்
பசியாறலையா உன் இரத்த தாகம்..

அரசியல் ஆடுகளத்தில்
அப்பாவிகள் பலிகடாக்கள்
எத்தனை தாலிகளை அறுக்கனும்
எத்தனை தூளிப்பிள்ளைகள்
அப்பனை பார்க்காமல் அழனும்
தூண்டில் போட போனவன்
துடிப்பு பிடித்த பாவத்துக்கு
பாவி அவனிடம் பலியாகி
பாடை ஏறும் அவலம் என்ன?

ஏழை உயிர் பொருட்டில்லையா?
அரசுக்கு அதன் மேல் பொருப்பில்லையா?
லட்சம் கோடிகள் கேட்கவில்லை
அவர்கள் லட்சியம் கோடி
கொண்டவருமில்லை...
மீன் இனம் இருக்கும்
எம் மீனவ்ர் இனம்?

கேட்பாரில்லை என்ற எண்ணம்
அரசுக்கா? அந்த அரக்கனுக்கா?
சிந்திச் செல்லும் ரத்த துளிகள்
விழுதுகள் அல்ல விதை மணிகள்
விழித்துக் கொண்டும் தூங்காதே அரசே
எல்லோரும் மண்ணின் மைந்தர்களே !!!


தமிழரசி

நிருபமாராவ் இலங்கை பயணம் : மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்த வேண்டுகோள்

இந்திய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார். தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து இவர் செல்லும் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்ப்படும் வேளையில் இதனால் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்றும் இது ஒரு கண்துடைப்புதான் என்றும் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி குறை கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த மீனவர்கள் பலியான விவகாரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.bஇந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசை மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜியிடமும் முதல்வர் வலியுறுத்தியதை அடுத்து இது கவலை தரும் விஷயம் என்றார்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிரணாப், வெளியுறவு துறை செயலர் நிருபமாராவை அனுப்பி வைக்க்க பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து இன்று ராவ் சென்னை வழியாக இலங்கை புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் வெளியுறவு துறை அமைச்சர் பெரீஸ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் நிலைமை குறித்து விவாதிக்கிறார். இந்திய இலங்கை கூட்டுக்குழு கூட விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.இத்துடன் இலங்கை கடற்படையினர் அத்துமீறி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பார் என தெரிகிறது.

கண்துடைப்பு என்கிறார் நிதின்கட்காரி: சென்னையில் நிருபர்களிடம் பேசிய நிதின்கட்காரி கூறுகையில்; தமிழக மீனவர்கள் நலனில் பா.ஜ., முழு அக்கறை வைத்துள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் முன்கூட்டிய உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறி விட்டனர். மத்திய அரசு தற்போது நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புவது ஒரு கண்துடைப்பு தான் என்றார். சமீபத்தில் கொல்லப்பட் வேதாரண்யம் மீனவர்கள் குடும்பத்தினரை பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள் தமிழக மீனவர்களை காத்திட தவறி விட்டது. மீனவர்கள் நிலை குறித்து பார்லியில் குரல் எழுப்புவோம்'' இவ்வாறு கட்காரி கூறினார்

RamnaD

உப்புக் குடித்தவர்களை ஒப்புக்கொடுக்கும் லாப விளையாட்டு (கவிதை)

உப்புக் குடித்தவர்களை ஒப்புக் கொடுத்து


ஆடும் பகடையாட்டம் ...


இப்போதைக்கு அலைக்கற்றை அலை ஓய,


எப்போதைக்கும் இரவலர் பட்டம் பூண்டு


அனுதாபிப் போர்வை மூட


கொட்ட வரும்
தேனீக்களை போக்குக் காட்டி


மீனவர் வோட்டுகள் எனும்


அடைத்தேன் பிய்த்துக் கொள்ள


எல்லாமொரு லாப விளையாட்டே ...


கடலோடும் அலையோடும் கரிப்பு மணிகளே


கேட்டுக் கொள்ளுங்கள்


உங்கள் உயிர்கள் மதிப்பு மிக்கவை


தக்கை வீசியவன் எக்கணமும்


அதை உணர்ந்தே இருத்தலில்


எப்போதும் செத்துக் கொண்டிருக்கிறீர்கள்


சிங்களவன் கை தும்பிகளாய்!


உங்கள் கதை உலர்ந்திடும் உப்பாக


கரைந்திடும் கடல் மணலாக


ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் ஒப்பாரி ஓசை


ஒப்புக் கொடுத்தொருக்கோ கேளாத தூரத்தே


அலையோசை தேய்த்துக் கரைக்கும் புறத்தே


மீண்டும் மீனவச் சாவுகள் ...


எப்போதும் மீனவர் பாடு மீன்பாடு.



கார்த்திகா வாசுதேவன்

தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

சிங்கள கடற்ப்படையால் கடந்த பத்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு மீனவர்கர் காட்டு மிராண்டித்தனமாக கொள்ளப்பட்டுள்ள செய்தி நிச்சயம் தமிழ் இன உணர்வாளர்களுக்கு பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது...

ஆனால் இதுவரை சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மீனவமக்கள் சிங்கள படையினரால் கொல்லப்பட்டபோதும் ஒவ்வொவொரு மீனவன் கொல்லப்படும்போதும் இரண்டு அறிக்கைகள் இரண்டு கண்டனங்
கலோடும்,தமிழின தலைவரின் ஒரு டெல்லி தந்தியோடும்,அற்பமான நிவாரனத்தொகையோடும் அந்த நிகழ்வுகளை அவ்வாறே மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்க சென்ற எம் சுயமரியாதை தமிழ் மக்கள் இம்முறை அது நிகழாது தம் இனம் காக்க எதையாவது நகர்த்திபோடுவர் என நம்புவோமாக......


ஆஸ்த்ரேலியாவில் மேட்டுகுடிமக்கள் தாக்கப்படும்போது ஓடி ஓடி கதறி அழுத வடஇந்திய செய்திசேனல்கள் எம் ஏழை மீனவனின் கண்ணீர் கதையை இதுவரை காட்டமறுப்பது ஏனோ??? அவன் ஏழை என்பதாலா?அல்லது தமிழன் என்பவன் கேனயன் என்பதாலா????


வட இந்திய சேனல்களை நொந்து என்ன பயன்???? முத்தமிழை வளர்ப்பதையே முதர்த்தொழிலாக கொண்டு இயங்கும் நம் தமிழ் தொலைக்காட்சிகள் மானம் அற்ற நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை நோட்டமிட்டு வயிறு வளர்க்கும் சேனல்கள் வயிற்றுப்பிழைப்புக்காக உயிர் பணயம் வைத்து கடல் கடந்து சென்று சுட்டு கொல்லப்படும் மீனவனின் இனமானம் இழந்து வாடும் துயர வாழ்வு கண்ணில் தெரியுமா சொல்லுங்கள்...


நான்கரையாண்டுகள் கொடநாட்டில் தூங்கி விழித்து தேர்தல் வர இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எம் மீனவ ஏழை குடிகள் நினைவில் வர ஓடோடி வந்து மீனவனின் இறுதி சடங்குக்கு சென்று ஆறுதல் சொல்லும் எங்கள் இனமானமுள்ள தன்மான தலைவியை பாராட்ட வார்த்தைகள் உண்டோ.அறிக்கைப்போர் நடத்தும் வீராங்கனையே எதிர்க்கட்சி தலைவியான உன்னால் இந்த ஐந்தாண்டுகள் தாய் தமிழகம் அடைந்த நன்மைகளுக்கு அளவுண்டோ..ஈழப்போரின் இழப்புகளை இதெல்லாம் சாதரணமப்பா என நியாயப்படுத்தியவர் இப்போது வீறுகொண்டு எழுவது எதனால் தமிழன் நியாபகமறதிக்காரன் என்பதலா????


திராவிட இயக்கத்தின் தலைவனே, தன்மான தங்கமே,சுயமரியாதை சிங்கமே, கருப்பு சட்டையின் கரம்பிடித்து வளர்ந்த கண்ணாடிபோட்ட கார்ல் மார்க்சே, பாராட்டு விழாக்களிலே காலத்தை தள்ளும் பாருடை வேந்தே,நீ செய்த காரியங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் காலம் உள்ளவரை மறவாது என் கண்மணியே...

ஈழப்போரை ஒருமணி நேர உண்ணா நோன்பில் முடிவுக்கு கொண்டுவந்த எங்கள் தலைவா,ஈழத்தமிழனுக்காக ஒருமணி நேரம் நடித்தவர் சாரி துடித்தவர் மீனவ பெரும் குடிகளுக்காக ஒரு கால் மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ராஜபக்சேவின் நாஜிப்படையை விரட்டி அடிப்பாரடா கலங்காதே என் உடன்பிறப்பே,,

அல்லது டெல்லிக்கு ஒரு கடிதம் போட்டு 2016 ஆம் ஆண்டுக்குள் களங்கம் தீர்ப்பார் பொருத்துக்கொல்லடா என் பொன்மணியே.

அல்லது தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் காவடிஎடுப்பேன் பதவிக்காக போர்ப்படை பார்த்து பதறாதே கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும் தம்பி ராஜபக்சே அப்பாவியடா மீனவனை கொல்வது ஆரிய கடல்பூதமாடா என சிரிப்பு அறிக்கையை துயரத்தில் மூழ்கிருக்கும் தமிழகம் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்....



சினிமாவுக்கு ஆங்கில தலைப்புவைத்தால் ஆப்படிப்போம் என கொக்கரித்த உயிர்மைக்காரன் எங்கே?
காஸ்மீரத்தில் கொடி நாட்டி அமைதியை கொண்டு வந்த தேசிய வியாதிகள் எங்கே?
மண்ணாங்கட்டி மத சார்பின்மை பேசும் கதர் சட்டை, கை சின்ன காரன் எங்கே?
காவிரி பிரச்சனையை காமெடி பிரச்சனையாக்கி உண்ணாவிரதம் இருந்த கலை குடும்ப கண்மணிகள் எங்கே ?
இங்குள்ள களைகளை பிடுங்காமல் வடஇந்திய அரசியல் புடுங்கிகளை நொந்து கொள்வது வீண் வேலை.ஒப்பாரும் நிக்காரும் இல்லா சுயமரியாதை கொண்ட தமிழர்களே பொறுத்து வெறுத்தது போதுமடா விழித்துகொள்..
நேற்று ஈழம் இன்று மீனவன் நாளை தமிழகம் கூட கழுத்தறுக்கப்படலாம்.இனப்பெருமை பேசி பேசி அலுக்கவில்லையா செயலில் இறங்க வேண்டிய நேரமிது.
நீ தமிழனடா, தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமில்லை தமிழ் ஒருவனுக்கு ரௌத்ரத்தையும் பழக்கும்....பழக்கிகொள்...


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.இல்லேயேல் தமிழன் என்று சொல்லடா தலைல அடிச்சி கொள்ளடா...









அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.



இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

ஐத்ருஸ்

மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன?

இந்திய கடற்படையோ அல்லது கடலோர ரோந்து படையினரோ, ஏன் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒட்டுமொத்த பிரச்னையின் மையமாக இருக்கும் சர்ச்சைக்குரிய, இந்திய - இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், 2008ல் போடப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாதவரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும்.


மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. படகுகளை பிடுங்குவது, அவற்றை உடைப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்குவது போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.


மீனவர்களின் தாக்குதலுக்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது தான் என்றும், அதை திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. 1974ல், இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் அது.


இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்த ஒப்பந்தம் தான்.ராமநாதபுரம் மகாராஜாவுக்கு சொந்தமாக, இந்த கச்சத்தீவு இருந்ததற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இருக்கின்றன. தவிர, பூகோள அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத முக்கிய இடம் கச்சத்தீவு.


இப்படியிருந்தும், கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது.அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு என, சில உரிமைகள் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்துவதற்கு உரிமை அளிக்கப்பட்டது.


இது தவிர, கச்சத்தீவு அந்தோணியார் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன.வலைகளை உலர்த்துவதற்கு உரிமை உள்ளது என்றாலே, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கும் உரிமை உள்ளது என்பது தான் அர்த்தம்.


அந்த காலத்தில் நைலான் வலைகளை மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது மாறிவிட்டதால், வலைகளை உலர்த்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போய் இருக்கலாம்.அதுகூட, 34 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்து வந்தது.



அவ்வப்போது சிறிய அளவில் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய அளவில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி நடைபெற்ற 2008ல், திடீரென ஒப்பந்தம் ஏற்பட்டது.இரு நாட்டு அரசுகளுக்கு இடையில், இந்த ஒப்பந்தம் போடவில்லை. விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு முனைப்பாக இருந்த சமயம் அது.


அப்போது இருநாட்டு அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அவர்கள் மட்டத்திலேயே போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது.அந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சென்சிடிவ் பகுதிகள் எது எது என கண்டறிந்து, அப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டது.அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய அதிகாரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர்.


அப்படி, இலங்கை அதிகாரிகள் கேட்ட கோரிக்கைகளுக்கு, இந்திய அரசு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் அது.அந்த ஒப்பந்தம் தான் இப்போதும் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் எனக் கூறி, இந்திய கடற்படையினரோ, கப்பல் ரோந்து படையினரோ பாதுகாப்பு தர முடியாத சூழ்நிலை உள்ளது.


நடைமுறையில் உள்ள உண்மை இது என்றாலும், இது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது. இரு நாட்டு அரசுகள் கூட போடாமல், வெறும் இரு தரப்பு அதிகாரிகளே போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளோ, போராடும் பிற அமைப்புகளோ முன் வைப்பதில்லை.

இந்த ஒப்பந்தம் தான், தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், பல காரணங்களுக்காக போடப்பட்டது அந்த ஒப்பந்தம்.


ஆனால், இப்போது புலிகள் அமைப்பே இல்லை என்றாகிவிட்ட பிறகும், அந்த ஒப்பந்தம் ஏன் நீடிக்கிறது என்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமாக எழாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

sakthistudycentre-கருன்

மீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....

மீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....


தமிழக மீனவர் படுகொலைப் பிரச்சினை குறித்து இணையத்தில் இயங்குபவர்கள் #tnfisherman என்கிற லேபிள் மூலமாக ட்விட்டரில் அகில இந்திய கவனத்தை கடந்த ஐந்து நாட்களாக ஈர்த்து வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக பெட்டிஷன் ஆன்லைன் மூலமாகவும் இந்திய பிரதமருக்கு நெருக்குதலை தந்து வருகிறார்கள்.

இதுபோன்ற பொதுப்பிரச்சினைகளின் போது பிளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இயங்குபவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படலாம் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்று இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வரலாம்.

நாள், நேரம் : 30-1-2011, மாலை 5.30 மணி
இடம் : மெரீனா பீச் (காந்தி சிலை பின்புறம்)


செய்தியாள‌ர்: யுவ‌கிருஷ்ணா

தமிழக மீனவர்களைக் காப்போம்

நண்பர்களே!

இணையத்தில் துளிர்த்திருக்கும் இச்சிறு உணர்வெழுச்சியை வளர்த்தெடுங்கள். எல்லா விதங்களிலும் தன் கொடூர முகத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாத கொடுங்கோன்மைக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பை இணையத்திலாவது பதிவியுங்கள். இதனால் என்ன பயன் என்றோ, தேவை, தேவையில்லை என்றோ யோசிக்காமல் தமிழக மீனவர்களுக்கான ஆதரவாய் உங்களின் குரல் இணையம் வழி எதிரொலிக்கட்டும்.

Dear Friends,

I have just read and signed the online petition:

"Save Tamilnadu Fishermen"

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:


http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Jyovram Sundar

உங்களின் எதிர்ப்புக் குரலை மிக சப்தமாய் ட்விட்டரில் #tnfisherman என்கிற trend ல் பதியுங்கள். Join the riot friends!


ப‌திவ‌ர் : அய்ய‌னார்

தமிழக மீனவன் இழவுக்காதை-கிழிந்து தொங்கும் முகமூடிகள்

ஈழத்தில் லட்சக்கணக்கில் இனம் அழிக்கப்பட்ட போது பிளாஸ்திரி ஒட்டிக்கொண்ட வாய்கள் இந்திய இறையாண்மை; அயல்நாட்டு விவகாரம் என்ற சாக்குக்குள் ஒளிந்த கதை பழசாகிப்போனது.

அந்த சாக்கு முகமூடிகள் சிங்களவன் சர்வீஸ் செய்த துப்பாக்கிகளை சோதித்துப்பார்க்க தென்தமிழக மீனவன் மார் கொடுக்கும் இந்நாட்களில் பொத்தலாகிக் கிழிந்து தொங்குகின்றன.

இலங்கையில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்ற போது வரிந்து கட்டிக் கிளம்பிய தமிழ் திரையுலகத்திற்கு இந்த இழவுகளால் பெரிய நஷ்டமேதும் இல்லை. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தான் இதுகாறும் பெரும்பாடு பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் ’’மெண்ட்டல்’’ இமேஜால் இந்த பிரச்சனையிலிருந்து அவரே அறியாமல் தப்பித்து விடுகிறார். யாரும் பொருட்டாக மதித்து அவர் குறித்து வினவுவதில்லை. சமீபகால தன்னிலை விளக்கங்களின் மூலம் கலைஞ்சரையே விழுங்கிவிடும் ஃபார்மில் உள்ள கமல்ஹாசன் இலங்கைத் தமிழனுக்கு சினிமா பைத்தியம் ’’இமேஜை’’ நிலை நிறுத்தி சாதனை செய்தது போல தமிழக மீனவனுக்கு பெண்பித்தன், மொடாக்குடியன் போன்ற ஏதேனுமொரு கதாபாத்திர மெருகேற்றல் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

டாக்டர் கேப்டனின் அறிக்கை எங்காவது வந்திருக்கிறதா என்று இணைய செய்தித் தாள்கள் முதல் பிள்ளைகளுக்கு இசி வழித்தெறியும் துண்டுச்சீட்டு வரை துழாவினாலும் கிடைக்கப் பெறவில்லை

ஃபோனுங் கையுமாவே சுத்துறாப்ல; டயலாக் இதுதான்!

''நுப்பத்தஞ்சா அது 2006லனா ஓகே! ஆங்...''

''அம்பத்தி.... மூணா அது போன மாசம்!...... சேலத்துல கூட்டத்த பாத்தீங்கள்ள! பின்ன .... ''

''எலுவதுக்கு மேலன்னா பேச்சு. இல்லாட்டி அய்யா கால்(Call !!!) வெயிட்டிங்கு''

இந்த அரிபரிகளுக்கிடையில் மீனவன் செத்தத லேடி கேப்டனும் கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க பன்ரொட்டியாரும் சொல்லி இருக்கமுடியாது. எனவே விசயமே தெரியாமல் (எதிர்பாராத காரணங்களால்) போனதால் விசயகாந்த் ஆட்டையிலிருந்து விலகிவிட்டார்.

அடுத்ததாக லெட்டர் பேடில் 2011ன்னு போட்டு புதுசா அடிக்காம பழைய லெட்டர் பேடிலேயே ஒயிட்னர் வைத்து பத்தை பதினொன்றாக்கும் நிலையில் கட்சி நடத்தி வருகிற சரத் குமார்,கார்த்திக் பற்றியெல்லாம் ஜெயா நியூசில் விளக்கமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுறா என்ற படத்தில் மீனவனாக நடித்த இளையதளபதி விஜய் தன் சமகால நடிகர்களில் மீனவனாக நடித்தது தான் மட்டும் தான் என்ற திருப்தியுடன் இவ்விசயத்தில் ஆசுவாசம் கொண்டிருக்கலாம். மீண்டும் கலைஞ்சர் குழும தொலைக்காட்சிகளில் காவலன் தலை காட்டத் தொடங்கி விட்டதால் இழுத்து மூடுவதைத் தவிர அவருக்கும் வேறு வழியேதுமில்லை.

வைகோ டெல்லி சென்று சிங்கிடம் கடிதம் கொடுத்து சிவசங்கர மேனனுக்கு டாட்டா காட்டி ஏர்போர்ட் நெருங்கி இருக்கக் கூடமாட்டார் அடுத்த இழவு சேதி வந்துவிட்டது! அவர் கொடுத்த கடுதாசி நம்பர் 10,ஜன்பத் சாலை வீட்டில் உளுந்தவடைக்கு எண்ணை உறியச் செய்ய அனுப்பப் பட்டு இருக்கலாம். பிப்ரவரி 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது நடந்தா சரி சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஜூஸ் குடுத்து சிறப்புரையாற்ற செயலலிதாவ கூப்பிடாம இருந்தா பரவால்லைங்க.

ராமதாஸ் கோவாலபுரத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டாராம்.

அதனால் ””ரெண்டு வாரம் முன்னாடி செத்துருந்தானுகன்னா அறிக்க உட்டுருப்பேனே!”” என்கிறார். மேலும் முதல்வரிடம் மீனவர்களுக்கு நல வாரியம் அமைப்பதாக இருந்தால் பாதிப்பேரை வன்னியர்களாகப் போடச்சொல்லி வலியுறுத்தப் போவது உறுதி!

செயலலிதா கொஞ்சம் அதிரடியாக ஹெலிக்காப்டரைக் கிளப்பினார்! ஆஹா! வந்துவிட்டாரய்யா தர்ம தேவதை! அம்மா வருவதற்கு முன்னமே இழவு வீட்டில் தற்காலிகமாக மரக்கட்டையில் படிகள் அமைக்கப்பட்டதாம்; அம்மையீர் உள்ளே நுழைய வசதியாக வாசல் சற்று இடித்து அகலப் படுத்தப்பட்டதாம் விட்டின் முன்புறம் முழுக்க மணல் கொட்டி மேடாக்கப் பட்டதாம் அடடா! இதல்லவா அதிரடி நலத்திட்டம்! இதற்குப் பிறகான காட்சி தான் அற்புதம்! இழவு வீட்டில் இறந்த மீனவரின் மனைவி மற்றும் தாயாரைத் தவிர அத்தனை பேரையும் துரத்திவிட்டார்களாம். மொத்தமாக 8 நிமிடம் அம்மா அந்த வீட்டில் இருந்தார் அழுதவர்களைக் கட்டி அணைத்தார் சில பல ஃப்ளாஷ்கள்! 1,00,000/- நிதி உதவி! முடிந்தது மேட்டர். வெளியே வந்ததும் நீட்டப்பட்டன மைக்குகள்! ‘’அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்’’ என்பதை வேறுமாதிரியாகப் பரப்புரை செய்துவிட்டு கிளம்பி விட்டார் ‘’எனது நல்லாட்சியில் மீன்களே இனி துள்ளிக் குதித்து வந்து கட்டுமரத்தில் விழும் ’’ என்று மட்டும் தான் சொல்லவில்லை.

கலைஞ்சர் டீவிக்காரர்கள் செயா வருகை தெரிந்த உடன், அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் மூலம் இழவு வீட்டில் 5,00,000/- பணம் கொடுத்துவிட்டு, மைக்கை நீட்டி ’’கலைஞ்சர் நல்லவர்;வல்லவர் நாலும் தெரிந்தவர்னு வாக்குமூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

திருமாவளவனை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் 500 பேர் மறியல் செய்தனர் [இவர்கள் நிலை தான் பரிதாபம்] இந்தச் சிறுத்தை துரோகத்தில் நம் முதல்வருக்கும் கருணாவுக்கும் சற்றும் குறைந்தவரில்லையல்லவா?! அதனால் தான்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் மானமிகு வீரமணியும் இளைஞன் படத்தை ஒவ்வொரு ஷோவும் பார்த்து எப்ப்படியாவது ஹிட்டாக்கும் முயற்சியில் உள்ளனர்! ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சமீபத்திய கிரக நிலை மாற்றங்கள் அவர் எதிர்பார்த்தாற் போலில்லையாதலால் சித்த பிரமையாம். மற்றவர்களுக்கு அறிக்கை எழுதிக் கொடுக்கும் அஸிச்டெண்ட்டுகள் லீவில் சென்றுவிட்டதால் சொல்வதற்கு எதுவுமிருக்காது.

இந்திய ஜனாதிபதிக்கு சேலையை சரியாகக் கட்டுவதே சிரமமாக உள்ள நிலையில் ராஷ்டரபதி பவனில் ரோஜாச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கு இல்லை.



மன்மோகன் சிங்குக்கு நீல டர்பன் வேணாம்னு மஞ்ச டர்பன் கோவாலபுரத்துல இருந்து பார்சல் போயிருக்காம் அத சுத்தி சுத்தி கட்டிட்டு இருப்பார்.


சொக்கத் தங்கம் சோனியா காந்தி நிருபமா ராவ இலங்கைக்கு அனுப்பி இருக்காங்க. ஈழப்படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கறதா சொல்லி அனுப்புனாங்களே முன்னொரு தடவை கடசீல என்ன ஆச்சு? அதே தான் இப்பவும் ஆகப் போவுது. எனக்கு புரியாத ஒரே விசயம் நேர்ல ஆளனுப்பிச்சு (Nil Report)அறிக்கைய வாங்கிட்டு வரணுமா! இல்ல பொம்பளைய அனுப்பிச்சி தான் இதுக்கு முன்னால எல்லாம் மத்த நாடுகளிலிருந்து அறிக்கை வாங்குனீங்களா?


கொன்னவன் வீட்டுக்குப் போயி மன்னிப்பு கடிதத்துல கையெழுத்து வாங்கற கேவலம் வேற எங்கயும் நடக்காது.




இந்திய ஊடகங்கள் இந்த பிரச்சனைய உப்புசப்பில்லாததுன்னு ஒதுக்கித் தள்ளுவதிலும் நியாயம் இல்லாமலில்லை; பின்ன தெனம் ஒரு கட்சி அறிக்கை உடறதுதான் சென்சிடிவ் பிரச்சன! அதைக் கவர் பண்ணினா காசு பாக்கலாம்; மீனவன் செத்தத உள்ளூர்லயே ஒருத்தனும் கண்டிக்கல இத வெச்சு மயிரா புடுங்கறதுன்னு நெனச்சிருப்பான்.


தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில பாதி மஞ்சத் துண்டுக்கு மணியடிக்கவே கொள்கைச் சபதம் கொண்டவை.மீனவர் படுகொலைன்னு தலைப்பிட்டு செத்தவன் போட்டோ குடும்ப விபரம் எல்லாம் விலாவாரியா போட்டுட்டு தொடர்ச்சி 26ம் பக்கம்னு சொல்லிடுவானுக அடுத்த பக்கத்துல கலைஞ்சரும், அவர்தம் புத்திரச் செல்வங்களும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும்! இந்த கருமத்துக்கு முரசொலியே பரவால்ல.


தமிழக அரசு கலைமாமணி அறிவிச்சாச்சு! வாங்குனவன்லாம் சேர்ந்து இனி பாராட்டு விழா எடுப்பான். கெழம் அதுல பிஸியாகிடும். பொழப்பத்த வக்கீல் தமிழன் ஹை கோர்ட்ல மீனவன் செத்துட்டான் நடவடிக்கை தேவைனு கேஸ் போடுவான்; ஹை கோர்ட் அரசை கேள்வி கேட்கும். கருணாநிதியின் அல்லக்கை ஐ ஏ எஸ் எவனாவது சிறப்பு அலுவலர்னு வெள்ள அம்பாசிடர தூக்கிட்டு வெட்டிப் பயணம் கெளம்பிடுவார்.


அடுத்த இழவுக்காக தமிழர்கள் காத்திருப்பார்கள்....


டிஸ்கி 1: டுவிட்டரிலும் பதிவுகளிலும் முன்னெடுக்கப் பட்டிருக்கும் பரப்புரையையும்,அதை செய்பவர்களையும் நக்கலடிக்கும் நண்பர்களுக்கு ஒரு :-)


டிஸ்கி 2:இத்தனை பேர ஏன் ஒண்ணும் செய்ய மாட்டீங்கிறீங்கன்னு கேட்டதுக்கு கூடவே இருக்கற சக பதிவர்,டுவிட்டர்கள் சிலரிடம் {பினா பானாஸ்} கேட்கத் தான் நினைத்திருந்தேன் அந்த முகமூடியும் கிழிந்து தொங்கட்டும் என்று
அவர்களுக்கு ஒரு :-)

பதிவர்: ராஜன்

மானமுண்டா இந்திய அரசே?!

எங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)
அவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.


தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.


பெருந்தலைவர்களே, மகாநடிகர்களே! நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்ற்ய்ச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.


எங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும்? எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை!



பதிவர்: தீபா

Saturday, January 29, 2011

இது பொறுக்குதில்லை! #TNfisherman

தமிழக மீனவர் படுகொலைச் செய்தி வெளியானதும் எனது உணர்வுகளை "கடுதாசு போடுவோம் வாங்க!" என்ற இடுகையில் முன்னரே வெளிப்படுத்தியிருந்தேன். இது, இரண்டொரு நாட்களாக இணையத்தில் தமிழர்கள் மூட்டியிருக்கிற உணர்வுத்தீயில், ஒரு தமிழனாக நான் செலுத்த வேண்டிய ஆகுதி!

இயல்பில் நான் பெருங்கோபக்காரன். எனது சினத்தை பெரும்பாலும் ஏளனத்தில் பொதிந்து எழுதுகிறவன் என்றாலும், அவ்வப்போது சுருண்டுபடுத்திருக்கிற எனது கோபம் சீறியெழுந்து படமெடுப்பதுமுண்டு. ஒட்டுமொத்த வலைத்தமிழரும் ஒரே இலக்கினை நோக்கி தத்தம் கோபத்தை ஏவுகணைகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கையில், ஓரமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியவில்லை.

இந்த தேசம் தற்கொலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது; அதனால்தான் விருப்பமாக விஷத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப்பிரிவிலிருப்பவனிடம் "நீ பிழைத்துவிடுவாய்," என்று மருத்துவர் முழுப்புவதுபோல, ரைஸினாக்குன்றின் ராஜதந்திரிகள் பொய்யறிக்கைகளைச் சொல்லிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்டுத் தனிமைப்படுத்தி பெருமிதப்பட முடியாத அளவுக்கு, காணும் திசையெல்லாம் மிஞ்சிக்கிடப்பதெல்லாம் பொறுப்பின்மை ஒன்றுதான். இங்கே மனிதனின் உயிர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிற ஆணுறைகளைக் காட்டிலும் மலிவாகிவிட்டது.

அரசியல்- ஊழலை நேரடி முதலீடாகவும், மக்களின் மறதியை மறைமுக முதலீடாகவும் கொண்டு நடத்தப்படுகிற வர்த்தகமாகி விட்டது. எல்லா நம்பிக்கைப் பொறிகளின் மீதும் எச்சிலை உமிழ்ந்து உமிழ்ந்து அவை கொழுந்து விட்டு எரியவிடாமல் கொன்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில், இணையத்தில் நிகழ்பெறுகிற பெருமுயற்சி ஒரு பெருவேள்வியின் துவக்கம் என்று பெருமை கொள்ளலாம்; தவறில்லை!

உடலில் ஓடுகிற உதிரத்தில் உப்புச்சத்து மிச்சமிருக்கிற அரசியல்வாதி எவனேனும் இருந்தால், அவன் நம்மைச் சற்றேனும் கவனிப்பான் என்ற அற்ப நம்பிக்கை ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பிணமெண்ணிச் சோர்ந்துபோன விரல்கள் இப்போது ஒருங்குறியில் உம்மைக் குறிவைத்து ஒன்றன்பின் ஒன்றாய்ப் பாணங்களைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. குண்டுதுளைக்காத கற்சுவர்களுக்குப் பின்னால், காகிதக்குழிக்குள் கவிழ்ந்து கிடக்கும் உங்களை நோக்கி, காற்றுவழியாக எங்களது கண்டனக்கணைகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.

இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும் ஒருநாள், அதிகாரமதில்கள் அதிர அதிர உங்கள் அலங்காரவாயில்களிலும் ஒலித்தே தீரும். இது ஒரு அச்சாரம்!

எரிய மறுக்கிற எல்லா ஈரவிறகுகளுக்குமுள்ளே ஒரு மவுனத்தீ மயக்கமுற்றுக் கிடக்கிறது. எப்போதாகிலும் அது விழித்தெழுகிறபோது அதன் ஆவேசத்தீயின் நாக்குகள் அரசாங்கங்களையே சுருட்டி விழுங்கிவிடுகின்றன. சரித்திரப்பாடத்தின் இந்த சத்தியமான செய்தியை, புது தில்லியின் புத்திமான்களே, புறந்தள்ளி விடாதீர்கள்! இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.

எங்களது கடற்புறத்தின் மணல்பரப்பு, எம் சகோதரரை எரித்த சாம்பலை உடுத்தி விதவைக்கோலம் பூண்டிருக்கிறது. காற்றில் அதன் துகள்கள் பறந்து ராஜதானிகளின் கற்கோட்டைகளின் மீது இன்னும் கவியாதிருப்பதற்கு, அந்த சாம்பல்படுகையின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் எம் கண்ணீரின் ஈரப்பதமே காரணம் என அறிக!

துயரமும், ஏமாற்றமும், இழப்புமாய்ச் சேர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிற ரசவாதத்தில், எமது கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் கருவுற்று பல காலாக்கினிகளை பிரசவிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. எங்களையே சாணைதீட்டிக்கொண்டிருக்கிறோம்; ஏவுகணைகளாய் உம் மீது வந்து விழுவதற்காக...! அடிவயிற்றுத்தீக்கு எரிபொருளாய் அடக்கமாட்டாத கண்ணீர் ஆறாய்ப்பெருகிக்கொண்டிருக்கிறது.

இந்தியத்தமிழன் இலங்கையை நோக்கி உமிழ்ந்த எச்சிலை விடவும், தென்புலத்திலிருந்து திரண்டுவரும் எமது கண்ணீர்க்கணைகள் வலிமையானவை. இந்த அஸ்திரங்கள் சினமுற்ற தமிழனின் இருதயக்கூட்டுக்குள்ளே குருதிதடவிக் கூர்தீட்டப்பட்டவை! விந்தியத்தைப் பிளந்தபடி வீறுகொண்டு வருகிற எமது சொல்லீட்டிகளை உங்களது காகிதக்கவசங்களால் முனைமழுங்கச் செய்ய முடியாது. தேன்தடவிய வார்த்தைகளால் இனியும் தேற்றிவிடவோ, மாற்றிவிடவோ முடியாது.

இது நிழல்யுத்தமல்ல: நிஜங்களின் கிளர்ச்சி! கேள்விக்குறிகளின் கூனை நிமிர்த்திக் கூர்தீட்டுகிற முயற்சி! மடிந்த மீனவனுக்காகக் கேட்கப்படுகிற மடிப்பிச்சையல்ல இது; உரிமைக்குரல்

இம்முயற்சி தொடரும்! எமது தமிழர் தமது உள்ளக்கிடக்கையை இங்கு
எழுதியெழுதி உம்மைத் துயிலெழுப்புகிற முயற்சியைத் தொடர்வார்கள்.

உதிரிகளாய்ச் சிதறிக்கிடக்கிற குமுறல்களையெல்லாம் இங்கே ஓரிடத்தில் குவித்து அதன் உச்சியில் இருக்கிற எம்மை அரசியல்வியாதிகள் அண்ணாந்து பார்க்க வைப்போம்.

நாங்கள் அனுப்புகிற மனுக்கள் நீங்கள் வாசிப்பதற்கல்ல; இப்போதாவது யோசிப்பதற்கு!

செத்தவன்போல நடித்தது போதும்; சற்றே சொரணை கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களது இறையாண்மையை ஏதேனும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க நேரிடும்

கட்டுரை : சேட்டைக்காரன்

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.


இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.

பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா?


சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?

இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?


அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்?


இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது.


மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.


ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம்.


இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).


கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம்.


இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம்.


இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம்.


இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம்.


இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும்.


பதிவர்: முகிலன்