Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, January 31, 2011

மீனவ நண்பன்

தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........
பதிவர்: சி.பி. செந்தில்குமார்

Saturday, January 29, 2011

தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...

பதிவுலக நண்பர்கள் வாசகர் அனைவருக்கும் ஒரு தாழ்மையான் வேண்டுகோள்... மீனவ நண்பர்களின் பிரச்சினைக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்றில்லாமல் இந்த தருணத்திலாவது உணர்வுள்ள தமிழனாய் பங்கெடுத்து கொண்டு நண்பர்கள் அனைவரும் தங்களது உணர்ச்சிகளையும் மனக்குமுறல்களையும், கண்டனங்களையும் கொஞ்ச நேரம் ஒதுக்கி பதிவு செய்யுங்கள் பதிவுகள் இட முடியாவிட்டாலும் சமூக தளங்களான ட்விட்டர்களிலும் ஃபேஸ்புக்கிலும் உங்களது உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளுங்கள்


தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...

கன்னித்தமிழ் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்பொத்தி கைக்கூலியாய் நின்று
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் தமிழினத்தலைவன்..!

உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று தமிழனை நம்பவைத்து
தக்க சமயத்தில் கழுத்தறுக்கும் தமிழினத்தலைவன்..!

சொல்லி சொல்லி உனை வரலாறு ஏசும்
உன்பெயர் சொன்னாலே தமிழுக்கும் கூசும்

சொத்து குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கவில்லையா??
கத்திக்கதறிய தமிழன் மீனவனின் குரல்.....

பெளத்த நெறி படித்து சிங்கள வெறிபிடித்து தோள்கள் தினவெடுத்து
தமிழன் உயிர் குடித்து தமிழன் இனமழிக்க துடிக்கின்றான்
சிங்களவன் அங்கே

தெய்வக்குறள் படித்து பதவி வெறிபிடித்து சூது மிக வளர்த்து
பாதி தமிழகத்தை பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான்
எங்களவன் இங்கே

இத்தாலி சனியாளுக்கு தப்பாது தாளமிடும்
தமிழினத்தலைவனை எபோதும் மறவாது
தமிழினம் இனி எப்போதும் மறவாது தமிழினம்

தமிழினம் அழிகிறது..! தமிழகம் அழுகிறது
தலைவன் நீ என்ன செய்தாய்...??

தனி அறையில் ஓய்வெடுத்து திறம்பட நடித்து
முதுமையிலும் இளமை கண்டாய் - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்

தமிழ் என் பேச்சு தமிழே என் மூச்சு என்று சொன்னாய்
தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்துகொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று

தமிழைக்கொண்டே தமிழினை அழித்துவிட்டாய் - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது - எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம் - அது
ஒட்டு மொத்த தமிழர்களின் புதைகுழி என்றறியாமல்

தமிழனை குறைவாக எடைபோட்டாய்
தமிழனுக்கு எதிராக தடைபோட்டாய்
மடிந்தது உன் சூழ்ச்சி’
முடிந்தது உன் ஆட்சி

அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றென்னும் நீதியும் நிலைக்கட்டும்

அடிவயிறு எரிகின்ற மீனவப் பெண்களின் வெப்பம்
அப்படியே பொசுக்கட்டும்
ஆதிதமிழினம் அகிலத்தை ஆளும்
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்
அந்நியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்’
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்

சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !

உங்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப தன்மானப்போர்:




உங்களது உணர்ச்சிகளையும் கண்டனங்களையும் பதிவு செய்ய இந்த பதிவுகளையும் படித்து பங்கெடுத்துகொள்ளுங்கள்


அண்ணன் வைகை அவர்களின்
முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!


அண்ணன் கே ஆர் பி செந்தில்:
தமிழர்களின் எழுச்சி.. #tnfisherman...


நண்பர் ம. பாண்டியராஜனின்
எங்கள் உரிமை,உணர்வுகளை விடமாட்டோம்:


அண்ணன் ஜாக்கி சேகரின்:
ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு.. http://www.jackiesekar.com/2011/01/blog-post_30.html


நண்பர் உண்மைத்தமிழன்:
ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!


மேலும் உங்களது பங்களிப்பினை பகிர்ந்துகொள்ள நண்பர் நீச்சல்காரனின் இந்த பதிவை பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும்
இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?



உங்களது உணர்வுகளையும் பங்களிப்புகளையும் நேரடியாக பகிர்ந்துகொள்ள


இணையதள முகவரி: http: //www.savetnfisherman.org/


ட்விட்டர் முகவரி: http://twitter.com/savetnfisherman


ஃபேஸ்புக் முகவரி:
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டர் தீ:


”கருணை இருக்கிறது நிதிதான் இல்லை என்றவரிடம் 'நிதி' களால் நிதி குவிந்ததால் கருணை காணாமல் போனதோ? #tnfisherman”


“விடைகொடு எங்கள் நாடே-அன்று கதறினார் ஈழத்தமிழர்கள். குரல் கொடு எங்கள் நாடே-இன்று தமிழக மீனவர்கள் #tnfisherman #நாளை தமிழர்களா ?”


“Marathamizhan RT @Prabha40: @kalvetu "பார்டரைத் தாண்டினால் சுடுவோம்" - ராஜபக்சே. "இங்கே பாடைகளும் இலவசம்!" - (இது யாருன்னு வேற சொல்லனுமா?) #tnfisherman”


neechalkaran R @ulavu புழுவைக்கூட குச்சியால் குத்தினால்,தன் தலையைத் தூக்கி எதிர்ப்பைக்காட்டும்.நம் அரசியல்வாதிகள் அதற்குக்கூட லாயக்கில்லை. #TNfisherman


saiganesh RT @ulavu: ஒத்த ரூவாக்கு அரிசி கொடுத்தவரே; பொங்கி வச்சிருக்கேன் என் புருஷன காணலயே #TNfisherman


verumpaye போதும் போதும் நீ தமிழ் வளர்த்தது போதும், தமிழச்சிகளின் தாலியை காத்திட ஏதாவது வழி செய்.. #tnfisherman




இதுபோன்று உங்கள் மனதில் உணர்ச்சிகளை ட்விட்டரில் #tnfisherman என்ற குறீயீடுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


இந்த பிரச்சினை உணர்வுள்ள தமிழனாக பங்கெடுத்து செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனி பங்கெடுக்கபோகும் நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்


தெய்வம் வந்து துன்பங்களை தீர்க்கும் என்று நம்பிடாதே
மண்ணில் பிறந்த உன்னால் புது மாற்றம் ஒன்று வந்திடுமே
நட நட நட வழி மாறீடாதே
நட நட நட விழி மூடிடாதே
நட நட நட வரும் காலம் நீயே
நட நட நட வா தூரத்தில் விடிவு இல்லையே


Don't buy your life
With people's money


Don't lie to your people
For the Shake of Popularity


Don't Sell our Freedom


People There want Food
and not your endless word


Are you Ready
Are you Clear
Are you Strong


"Lets Stand Together
and make difference"

பதிவர் : மாணவன்

ஒன்றுபடுவோம் மீனவச் சகோதரனுக்காக.

பொதுவாக நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்றுதான் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் சொல்வார்கள். ஆனால் மீனவச் சமுதாயம் ”எங்களை வேலை செய்யவிடு” என்று போராடும் துரதிர்ஷ்டநிலை தொடர்ந்து இங்கு இருந்துவருகிறது. கூடவே உயிர்பலி வேறு..


ஒரு சிறிய நாடு, இந்தியாவின் குடிமக்களைக் கொல்வதும் அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடு. மீனவனைக் கொன்றால், அவர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற திமிரில் தான் நம் அரசுகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.


கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, இந்தியா செய்த மாபெரும் தவறு. அதனுடைய விளைவைத்தான் இன்று அனுபவிக்கிறோம். ‘மீனவர்களும் எல்லை தாண்டுகிறார்களே’ என்று பிரதமரே வைகோவிடம் கேட்டிருக்கிறார். ‘எல்லை தாண்டினால், சுட்டுக் கொல்லவேண்டும்’ என்று சர்வதேச /இலங்கை சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளதா? பாகிஸ்தானே எல்லை தாண்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்தும்போது, இலங்கைக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் என கொஞ்சம் யோசித்தாலே அனைவருக்கும் புரியும்.


நிருபமா இலங்கை சென்றிருக்கிறார். மீனவரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அல்ல..இனிமேல் தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள் என்று மன்றாட..இந்தியா இவ்வளவு மோசமான நிலையில் இதற்குமுன் இருந்ததே இல்லை. அடிமைப்பட்டுக் கிடந்தபோது கூட, நம் முன்னோர் தைரியமாக தன் உரிமையை வெள்ளைக்காரனிடம் கேட்கவில்லையா?


ஈழப்போர் முடிவுக்கு முன், விடுதலைப் புலிகளுக்கும் மீனவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுடுவதாகச் சப்பைக்கட்டு கட்டிய அறிவுஜீவிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வார்கள்?


மோசமான கொலை வெறியில் சிக்குண்டு கிடக்கிறது இலங்கை ராணுவமும் அரசும். அவர்களுக்கு உடனடித் தேவை மனநலச் சிகிச்சை..இல்லையென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில்தான் இது முடியும்.


இணையத்தில் இந்த மாபெரும் எழுச்சியை உண்டாக்கி நடத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..


பதிவர்: செங்கோவி

மீனவர் பிரச்சனை: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஒரு கடிதம்.

வணக்கம் அமைச்சரே

உங்களுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவல்களில் இதை படிக்க நேரம் இருக்குமான்னு தெரியலை. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் எழுதுகிறேன்.

பொதுவாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே தேர்தலில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏன் இப்போதெல்லாம் கட்சி தலைவர்களை தவிர்த்து தொண்டர்கள் (இருந்தால்!)கூட அலட்டிக்கொள்வதில்லை. யார் ஜெயித்தாலும் கஷ்டம் மாறப்போவதில்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

அதுக்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் வெற்றி. அதில் ஏற்பட்ட சர்ச்சையை பற்றி மக்கள் யாரும் வாயை திறக்கவில்லை. ஏனெனில் உங்களை எதிர்த்து நின்றவர் ஜெயித்திருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் நடக்கபோவதில்லை. நிற்க.

இதுபோலவே நீங்கள் செய்யும் ஊழல்களையும் நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஜூ.வியிலும், ரிப்போட்டரிலும் வரும் கட்டுரைகளை மாய்ந்து மாய்ந்து படிப்போம். அது ஒரு விறுவிறுப்புக்காக மட்டுமே. ஏனெனில் ஊழல் செய்யும் அரசாங்கமே ஊழலை விசாரிப்பதால் என்ன தண்டனை கொடுக்கும் என்பது எங்களுக்கும் தெரியும்.

இது போலவே ஈழத்தமிழர் பிரச்சனையிலும் அமைதியாக இருப்போம் என நினைத்தீர்கள். ஆனால் தமிழகத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டவுடன் ஜல்ஜாப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்தீர்கள் அல்லது எடுப்பது மாதிரி நடித்தீர்கள்.

தமிழர்கள் அனைவரும் சுரணை கெட்டவர்கள் என எங்களை நாங்களே திட்டிக்கொள்வோம். ஆனால் உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் சுரணை அதிகமாகவே இருக்கிறது. அதை ஒருங்கிணைத்து வழி நடத்த ஒரு சுரணையுள்ள அதிகாரமிக்க தலைவன் இதுவரை கிடைக்கவில்லை. அதுதான் நாங்கள் பிரிந்து சோர்ந்து கிடப்பதற்கு காரணம்.

இதுபோலத்தான் மீனவர் பிரச்சனையில் புலம்பிக்கொண்டிருந்தோம். உண்மைச்சொல்ல போனால் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருந்தோம். நேற்றுதான் கையில் உள்ள வெண்ணெய்யை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

ஆம் இன்று இணைத்தின் மூலமாக தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் இப்பிரச்சினையை எடுத்து சென்றுகொண்டிருக்கிறார்கள் தமிழ் சகோதரர்கள்.

இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூண் ஆட்டம் கண்ட நிலையில் அதற்கு முட்டு கொடுக்க ஐந்தாவது தூணாக எழுந்து நிற்கிறது இணைய வழி எழுத்து புரட்சி. இன்று ட்விட்டரிலும் , பேஸ்புக்கிலும் நிரம்பி வழிகிறது போராட்ட குரல்கள்.

எங்களுக்கு பதில்சொல்லவில்லை என்றாலும் சர்வதேச சமூகம் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என அறியக் காத்திருக்கிறோம்.

உங்களைச்சொல்லியும் குற்றமில்லை என்னதான் உள்துறை அமைச்சராக இருந்தாலும் நீங்களும் கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடை நிலை ஊழியன் தானே. உங்களால் வேறு என்னசெய்துவிடமுடியும். ஒன்றைத்தவிர!

நீங்கள் ஒரு அமைச்சராக இல்லாமல் ஒரு தமிழனாக, தமிழர்கள் குரல் கொடுக்கும் ட்விட்டர் தளத்தில் எங்களுக்காக #tnfisherman என்ற டாக்கில் ஒரு ட்விட் செய்து குரல் கொடுங்கள் அது போதும்.

மீனவர் படுகொலைக்கு எதிராக ட்விட்டரில் தொடங்கியிருக்கும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/

ப‌திவ‌ர்: சிநேகித‌ன் அக்ப‌ர்


மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman

கொல்லப்படும் மீனவர்களைக் காக்க, சிங்கள இனவாதத்திற்கு எதிராக, இந்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக காலையில் இருந்து ஒட்டுமொத்த ட்விட்டர் தளம் தகிக்கிறது.

அந்தக்குரல் இன்னும் வலைப்பக்கம் உட்பட மற்ற தளங்களில் ஓங்கி ஒலிக்கவில்லையென்றே தோன்றுகிறது. கொஞ்சம் உங்கள் குரலை உயர்த்துங்கள்..... ஒரு மாற்றத்துக்கான சிறு தீ ட்விட்டர் தளத்தில் சுடர்விட்டிருக்கிறது.
 
உங்கள் குரல்களை ட்விட்டரில் பதிந்து #tnfisherman என இணைத்திடுங்கள். கணக்கு இல்லாதோர் ட்விட்டரில் கணக்குத் துவங்கி குரல் கொடுங்கள்.

-------------------------------------
மீனவர் பிரச்சனைக்காக தமிழ்மணம் ஜன்னல் திறந்தது போல் மற்ற தளங்களும் திறக்க வேண்டும். #tnfisherman

மீனவர்களுக்காக ட்விட்டர் மட்டும்தானா facebook/ buzz / blog எல்லாம் தூங்குகிறதே! (((: #tnfisherman

மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கவில்லை - இலங்கை. அப்போ கூட்டிவந்து குடிவெச்சிருக்கிற சீனாக்காரன் தாக்கியிருப்பானோ!!? #tnfisherman

வெளியுறவுத்துறை செயலர் நிருபமா கொழும்பு பயணம்-எஸ்.எம்.கிருஷ்ணா # இராஜபக்ஷேவை நலம் விசாரிக்கத்தானே!!!! #tnfisherman

மீனவர் கொலைகளைத் தடுக்க ரசிகர்களை பிரதமருக்கு போஸ்ட்கார்டு போடச்சொல்லிட்டாரா சுனாமியில் மீண்டு வந்த மீனவன்சுறாவிஜய்!!!! #tnfisherman

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!! இணைந்து இன்னும் பல கொலைகளை சகித்துக்கொல்வோம் #tnfisherman

நாகையில் வைகோ 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போறாராம்! ஏன் அதுவரைக்கும் நல்ல நாள் இல்லையோ #tnfisherman

இப்படி ட்வீட்-டி என்ன கிழிச்சுடப்போறீங்கன்னு கேக்குது ட்வீட் படிக்கிற ஒரு சோனியா அடிமை! # எதாவது கிழியும் வரை ட்வீட்வோம் #tnfisherman

குடிசைகளே இல்லாத கிராமங்கள்! # கருணாநிதி மீனவனே இல்லாத கடற்கரைகள் # சிங்கள ராணுவம் # நல்ல டீல்! #tnfisherman

மறைந்த போளூர் வரதன் எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு கிடாவெட்டிய காங்கிரஸார்! # கூடவே மீனவனையும் #tnfisherman

தமிழா! தமிழா!! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப்போட்டாலும், மீன் பிடிக்க மட்டும் போகமாட்டேன் # கலைஞர் டிவி # #tnfisherman

பெண்கள், வயசானவங்க - இத படிக்காதீங்க... http://tinyurl.com/458wwyu

தோழா..... வானம் தூரம் இல்லை # இளைஞன் தமிழ் மீனவா மரணம் தூரம் இல்லை # ஆளும்கட்சி #tnfisherman

ஆறுதல் கூறப்போன இடத்திலும் ஓட்டு கேட்கிறார் ஜெ: முதல்வர் புகார் # அப்படியே தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க தலைவரே

மீனவனை சிங்களன் கொல்லுமபோது அமைதிகாக்கும் இறையாண்மை, சிங்களனை அடிப்பேன் எனும்போது மட்டும் விழித்துக்கொல்வது ஏன்? #tnfisherman

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா: அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து # தமிழக மீனவர்கள் என்னா குலம்? # #tnfisherman

இனிய நண்பர் இராஜபச்ஷே-ன் நோய் குணமாக, இந்தியா சார்பில் மீனவர்களைக் காவுகொடுக்கச்சொல்லி இத்தாலிய சாமியார் சொல்லியிருப்பாரோ? #tnfisherman

புதுவை காங்கிரஸில் பதவி கொடுக்கலைனு .சி ஆட்கள் தீக்குளிக்கறாங்களாம். உப்புப்போட்ட 2 மீன்துண்டு தின்னுட்டு தீக்குளிக்கபோங்க #tnfisherman

1991-96ஜெயலலிதா ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் #நோட் திஸ் ராஜபக்ஷே!

மீனவர் ஜெயக்குமார்மறைந்தசெய்தி கேள்வியுற்றதும் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு ரூ.5 லட்சம் தந்தது #கொலையில்லையாம் #tnfisherman

மீனவர்களுக்காக சினிமாக்காரங்க கருப்புத் துணியோட இன்னும் சீன் காட்டலையே! .. அடுத்த படம் ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காதோ #tnfisherman

ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி # நாசமாப்போச்சு! ? #tnfisherman

மத்திய/மாநில ஆட்சி(!) புரியும் அரசியல்வாதிகள் யாருக்கும் இந்த ஒரு வாரமா தின்ன மீன்ல ஒரு முள்ளுகூட குத்தலையா? #tnfisherman

இணைந்து குரல் கொடுப்போம் http://www.savetnfisherman.org/

----------------------------------------------

தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. http://www.savetnfisherman.org/


பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண http://twitter.com/#!/search?q=%23tnfisherman




ப‌திவ‌ர் : ஈரோடு க‌திர் 

ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!
தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!






இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்
http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!
பதிவர்:   உண்மைத்த‌மிழ‌ன்