Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Monday, January 31, 2011

'மீனவ நண்பனாக' என்னென்ன செய்யலாம் - கருணாநிதி?

கடந்த 35 வருடங்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மீனவ கிராம்த்தில் சராசரியாக 200 குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், சுமாராக மூன்று மீனவ கிராமங்களே தமிழகத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன!

தான் சுட்டதாக இலங்கை ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் சுடப்பட்டு இறந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதொரு நிஜம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கபில் சிபல் போன்றோர்கள் கூறுவதை புறம் தள்ளிவிட்டு அப்பிரச்சினையை அணுகுவது போல், இவ்விஷயத்தில் செத்து மடிவது நம் இனம் மட்டுமே என்பதால், இலங்கை சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு, இலக்கில்லாமல் கூப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு சாவு கூட இங்கு விழக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. இந்திய இலங்கை கடல் எல்லையில் தான் இப்பிரச்சினை நடக்கிறது. ஆக இப் பிரச்சினையின் முழுப்பொறுப்பும் மத்திய அரசாங்கத்தையே சார்ந்தது. மாநில அரசு தனது காவல் துறையை அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பாக எல்லையில் நிறுத்த முடியாது. அதேபோல் தமிழக முதல்வர் இலங்கை அதிபரை அழைத்தோ அல்லது அங்கு சென்று பேசியோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது - உண்மை தான் ஏற்றுக் கொள்வோம். அதனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை, பாவம் அவர் என்ன செய்வார்? என்று கேட்பது - சரியல்ல!

சரி இதற்கு விடிவு காண என்ன தான் செய்ய வேண்டும் கருணாநிதி?


* இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மற்றும், சுமார் 18 மைல் தொலைவிலேயே அண்டை நாட்டை கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்கு அதன் மக்களை, குறிப்பாக மீனவர்களை பாதுகாக்க இரு நாட்டு கடல் எல்லையில் நிரந்தர கடல் பாதுகாப்பு படையை நிறுத்த் வேண்டும்.

* அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள நாடு இந்தியா என்று உலக நாடுகளுக்கு காட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டான கால கட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்டெடுக்க வேண்டும்.

* அண்டை நாட்டின் ஆபத்து உள்ள எல்லையோர மாநிலம் என்ற அடிப்படையில், காஷ்மீரைப் போன்று (அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்) சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக தமிழகத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியைப் பெற வேண்டும்.

* அந்த நிதியைக் கொண்டு சிறியதும், பெரியதுமான உலகத்தரத்திலான இருபது மீன்பிடி துறைமுகங்களை அமைத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கடல் உணவுப் பொருட்களை, ஓரிடத்தில் சேமிக்கும் கடல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி, அங்கிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

* ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டால், அதற்கு நீதிமன்ற விசாரணையின் மூலம் தான் தண்டனை அளிக்கப்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் 'ஒரு' தமிழக மீனவனின் உயிர் பறிக்கப்பட்டால் கூட இலங்கையை எதிரி நாடாக அறிவித்து, சர்வதேச அரங்கில் இதற்கான தீர்வைக் காண வேண்டும்.

இவ்வளவுதான்! மீனவர்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பொழுது மீன்பிடி துறைமுகம், ஒருங்கிணைந்த கடல் போக்குவரத்து வசதி, ஏற்றுமதி எல்லாம் எங்கு வருகிறது? ஏன் வருகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால் மத்திய அரசு நிதி உதவியில், கண்காணிப்பில் கிழக்கு கடற்கரை முழுதும் அடுத்தடுத்து நவீன மீன்பிடி துறைமுகங்கள், அவற்றையெல்லாம் இணைக்கும் நீண்ட தூர கடல் போக்குவரது செயல்பாடுகள், அதற்கும் மேலாக கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்றே பிரத்தியேகமான துறைமுகம்..... நினைத்துப் பாருங்கள், இதில் ஒரு அன்னிய நாட்டவன் உள்நுழைந்து தாக்குவது என்பது இந்திய தொழிற்துறையையே தாக்கியதாகாதா...?!

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய விஷயமாயிற்றே, இதை கருணாநிதியால் எப்படி சாத்தியமாக்க முடியும் என்பது தானே கேள்வி? அதையும் பார்ப்போம்.

எதை வைத்துக் கொண்டு மத்திய அரசில், மூன்று கேபினெட், நான்கு இணை அமைச்சர் பதவிகளைப் பெற்றார்? எதை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழலை ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்? அதே மந்திரத்தை வைத்துக் கொண்டுதான் மேற்கூறிய அனைத்தையும் சாத்தியமாக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் பாண்டியை சேர்த்து மொத்தம் 40 பாரளுமன்ற உறுப்பினர்களில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 29 எம்.பி களும் ஓரணியில் நின்றாலே போதும் - மேற்சொன்ன விஷயங்கள் சாத்தியம் தான். அதற்கு கருணாநிதி செய்ய வேண்டியது ஒன்று தான். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகள் அடங்கிய ஒரே மனு. அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு குழு. அதற்கு தலைமையேற்க வேண்டியது எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா. போராட்டத்தை வடிவமைப்பது வைகோ மற்றும் நெடுமாறன். மேற்படி போராட்டத்தில் எடுக்கப்படும் எந்த விதமான முடிவுகளுக்கும் தி.மு.க வின் 18 எம்.பி களும் கட்டுப்படுவார்கள்! இதை கருணாநிதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!

அவ்வளவு தான்(!). இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்கப் பட்டால், மீதமுள்ள தேசிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி களும் போராட்டக்குழுவின் முடிவுகளுக்கு உடன்பட்டாக வேண்டும். அப்படி உடன்படாதவ்ர்கள், அவர்கள் மட்டுமன்றி அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த எவருமே தமிழகத்தில் இனி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத நிலையை உருவாக்க வேண்டியது, வைகோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களின் பொறுப்பு!

இது நடந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருமா? வராதா? -  கண்டிப்பாக வரும். ஆனால் பிரச்சினையே, மேற்சொன்ன மாதிரி ஒரு ஒற்றுமையான சூழ்நிலை உருவாக வேண்டும். அதை உருவாக்கும் பொறுப்பை முன்னெடுக்க வேண்டியது யார்? கருணாநிதியா? வைகோ வகையறாவா? அல்லது பொது மக்களா?

பொது மக்கள் எக்காலத்திலும் இதை முன்னெடுக்க மாட்டார்கள். பின்ன கருணாநிதியா? இப்பிரச்சினை தனக்கு விழும் ஓட்டை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிற போது அவரும் இதை முனெடுக்க மாட்டார். அப்படியானால் இவ்விஷயத்தில் அதிக பிரயத்தனப்படும் வைகோ உள்ளிட்டவர்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும். சாத்வீகமான முறையில் கருணாநிதியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும். வெற்றி கிட்டும் வரை முயல வேண்டும்.

ட்விட்டரில் எழுதுவது, வலைப்பூவில் திட்டுவது - இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் எழுச்சியுற வேண்டும், தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும், எம்.பி களும் ஒன்றிணைய வேண்டும்...!

திஸ்கி: ஏய்... ஏய்... யாரப்பா...?  நல்ல கனவு, திடீர்னு எழுப்பி கெடுத்திட்டியே.. பாவி! ...ஏய் என்ன ஏம்ப்பா திட்டுற? நல்ல கனவுன்னா.. அடிக்கடி இதே மாதிரி கனவு காணு, உனக்கு தெரிஞ்சவங்கள எல்லாம் இதே போல கனவு காண சொல்லு. நெசத்துலயே நடக்காமயா போயிடப் போவுது?!

Sunday, January 30, 2011

கிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல,தமிழனின் மானம்!!!

எல்லை பாதுகாப்பு என்ற பேரில் சிங்களக் கொலைப்படையும், இந்தியக்கடல்படையும் கூட்டு சேர்ந்து தமிழக மீனவன் உயிரை குடிக்க ஆரம்பித்து 500க்கும் மேற்பட்டோர் தெருநாயைப்போல கடலுக்குள்ளேயே சுடப்பட்டிருக்கின்றனர். மீனவன் எல்லையைத்தாண்டிப்போனதால் சுட்டுக் கொல்லப்படவில்லை, நம் தேசத்து எல்லைக்குள்ளேயே நிராயுதபாணியாக மீன் பிடிக்கையில் அந்த சிங்கள இழிமகன்களால் சுடப்பட்டிருக்கின்றனர். தலைக்கு மேலே சீன இழிமகன்கள் நில எல்லையை அபகரிக்கின்றான்கள். காலடியிலே சிங்கள மதயானைகள் நீர் எல்லையை அபகரிக்கின்றனர். வெட்கமும் துப்பும் கெட்ட மத்திய மாநில அரசுகள் ஊழலில் எத்தனை கோடிகள் கிடைக்கும்? என்றே சதாசர்வகாலமும் சிந்தித்து மும்முறமாக கொள்ளையடிக்கின்றனர். நாசமாப்போக!!!


நூற்றுப்பதினெட்டு கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தில்கொல்லப்பட்ட மீனவர்கள் 500 பேர் என்ன,ஒரு பெரிய தொகையா ? என்று கேட்கலாம், இதே உயிர் மும்பை மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? கேரள மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? கோவா மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? இல்லை ஆந்திர/வங்காள மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? சட்டசபையில் கிழி கிழியென்று இந்நேரம் நாறடித்துக் கிழித்திருப்பார்கள். நன்றாக சிந்தித்துப்பாருங்கள். ஒரு இயக்குனர் பெரும் பாடுபட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று பிணமாய் திரும்புவதை யதார்த்த சினிமாவாக எடுத்திருக்கிறார். அதைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போடும் நம் மாநில அரசு,


மத்திய அரசு என்ன பாராமுகம் காட்டினாலும் என் உயிரா போச்சு என வாயையும் குதத்தையும் பொத்திக்கொண்டிருக்கிறது.வேறு எந்த நாட்டிலாவது தவறு செய்யாத இன்னொரு நாட்டின் குடிமகனை நாயை சுடுவது போல சுடவும்,ஓணானின் கழுத்தை சுருக்கு போடுவது போல இழுத்துச் சென்றும் கொல்ல முடியுமா? ராஜீவ் என்னும் ஒற்றை உயிருக்காக தமிழர்கள் பலரை இன்னும் நாம் எத்தனை நாட்களுக்கு பலிகொடுப்பது? தமிழன் உயிர் தூசல்ல என்று இந்த பதர்களுக்கு காட்டும் நேரம் இது!!!.விஞ்ஞான யுகத்தில் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி ஒன்று திரள்வோம். நீதிக்கு குரல் கொடுப்போம், அங்கே கிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல, தமிழனின் மானம் என்பதை நன்கு புரிந்து கொள்வோம்.

நண்பர்களே!!!உங்களின் தலையான கடமையாக ஐந்து நிமிடம் இதற்காகசெலவிடுங்கள்:-மீனவர் சாவை தடுக்க இந்திய அரசின் கவனஈர்ப்புக்கு கொண்டு செல்லும் இந்த இணைய படிவத்தில் நீங்களும் கையெழுத்திடலாம்.நிறைய கையொப்பம் இடுங்கள். மொத்தம் ஒரு லட்சம் கையொப்பங்கள் வேண்டும் இன்னும் 2000 கூட தேறவில்லை, நான் என் உறவினர்கள் ஐடிகளைப் பயன்படுத்தி 6 கையொப்பம் இட்டேன். வாருங்கள். முடிந்த வரை இந்த செய்தியை உங்கள் இணைய தளத்தில், வலைப்பூவில்,ஃபார்வர்டு மெயில்கள் மூலம் பரப்புங்கள்.
நன்றி!!!நன்றி!!!நன்றி!!!

கீதப்ப்ரியன்

Saturday, January 29, 2011

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

மீனவர் படுகொலைக்களுக்கு எதிராக ட்விட்டரில் நடைபெறும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/
இதுவரை இலங்கை கடற்படையால் ஐநூற்றுக்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஜெயலலிதா ஓடோடிப் போய் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, கொல்லப்பட்ட மீனவர் குழந்தைகளின் படிப்புச் செலவை அதிமுக ஏற்கும் என்று அறிவித்த கையோடு, வருகிற தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதியோ “1991-96-ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.” என்று வழக்கமான பாணியில் பழியை புள்ளிவிவரங்களின் மீது போட்டு விட்டு லாவணி பாடுகிறார்.
மேலும் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் மறைந்த செய்தி கேள்வியுற்றதும், அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் தந்து மீனவர்களின் கோபத்தை தணிப்பதற்கு சாணக்கியத்தனமாக முயன்றார். மட்டுமல்லாது, அவரது மனைவி முருகேஸ்வரிக்கு சத்துணவு உதவி அமைப்பாளர் பதவிக்கான பணி நியமன உத்தரவும் தந்து தன்னை கருணை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஆகவே மீனவ மக்களிடம் ஓட்டு கேட்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று ஆபாச அரசியல் செய்கிறார் கருணாநிதி.
இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் வருகிற சனிக்கிழமை(29.1.2011) இலங்கை செல்கிறாராம். அவர் மீனவர் கொலைகள் குறித்து ராஜபட்சேவிடம் பேசுவாராம். ஆமாம் நாமும் நம்புவோம், பிரணாப் முகர்ஜியும், சிவசங்கரமேனனும் இலங்கை சென்று வந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கே கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்டது மாதிரி நிருபமாவின் பயணத்தின் பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.
இதோ 6-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம் அறிவித்து விட்டார், சரத்குமார் போராடக் கிளம்பிவிட்டார். இனி போராட்டங்கள் ஒரு சடங்கைப் போல நடத்தப்படும். கருணாநிதிக்கு எதிரான ஒரு தேர்தல் அஸ்திரமாக மீனவர் விவாகாரம் மாற்றப்படுவதை எதிர்கொள்ள கருணாநிதியும் ஒரு அரை மணி நேர உண்ணாவிரத்தை துவங்கினாலும் துவங்கி விடுவார் போலிருக்கிறது. அதன் முன்னோட்டமாக மீனவ சமூகத்திலிருந்து பொது உடமை இயக்கத்திற்கு வந்த சிங்காரவேலரின் 151 நினைவு நாளை அரசு விழாவாகாக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு. மீனவர்களுக்காக தான் நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் கருணாநிதி.
தேர்தல், ஓட்டு, என்று வந்து விட்டாலே கொலை செய்யப்பட்ட மீனவர் பிணங்களுக்கு உயிர் வந்து விடுகிறது. தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும். தேர்தல் வாக்குச் சீட்டுகளை நம்பி பிழைப்பை ஓட்டும் அரசியல்வாதிகள் இதன்றி வேறு என்ன நினைப்பார்கள்?
ஜே என்றால் “இப்போது நான் எதிர்கட்சி ஆகவே இப்போது எத்தனை பேரை வேண்டுமென்றாலும் சுடு. அது எனக்கு ஆதாயமாக முடியும். நான் ஆட்சிக்கு வந்தவுடன் சுடாதே.” கருணாநிதியோ “இப்போது வேண்டாம், ஏனென்றால் நானும் ஆளும் கட்சி, நாளை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் சுட்டுத் தள்ளு”. இதுதான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மீனவர் பிணங்கள்மீது நடத்தும் விளையாட்டு.
இந்த அரசியல்வாதிகளின் மோசடி நாடகங்களில் இருந்தோ இந்தியா போன்ற விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட அரசிடம் இருந்தோ தமிழ் தேசியவாதிகள் எந்த பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த வைகோ “சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கும். ஆகவே இந்திய அரசு ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
பெரும்பலான இலக்கியவாதிகள், தமிழ் தேசியவாதிகள், திராவிட இயக்க ஆர்வலர்களின் கருத்துமே இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக இருக்கிறது. இவர்கள் அரசு ஒடுக்குமுறையை, கட்சி ஒடுக்குமுறையாக சித்தரிப்பதன் மூலம் “இந்தியா நல்ல நாடுதான், அதை ஆள்வோர்கள்தான் சரியில்லை”, என்கிறார்கள். காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷமும் இதிலிருந்தே பிறக்கிறது. உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது இந்திய அரசும் அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கமுமே. அந்த பெருமுதலாளி வர்க்கங்களின் நலனை முன்னெடுப்பவர்கள்தான் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவருமே.
விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட ஒரு அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் இவர்கள் அரசு என்னும் ஆக்ரமிப்பு இயந்திரத்தை எதிர்க்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே அதை லாவகமாக கட்சி சார்ந்து திருப்பி தேர்தல் ஆதாயமாக மாற்ற நினைக்கிறார்கள். ஈழப்படுகொலைகள், விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையிழப்பு, மீனவர் படுகொலை என எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அரசு-ஆளும் வர்க்கங்களின் கட்டுமானம்தான் காரண்ம். அதுவல்லாமல் காங்கிரஸ் போய் பிஜேபி வந்தவுடன் “நாம் கனவு காணும் ஈழம் அமைந்து விடும்” என நினைப்பது எவளவு அபத்தம். அல்லது “பிஜேபி வந்தாலும் ஈழம் அமையாது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் ஆதரிக்கிறோம்” என்றால் அது எவளவு அயோக்கியத் தனம்.
தற்போது டிவிட்டரில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு பா.ஜ.க கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்ல? இவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்த பா.ஜ.க கட்சி என்ன செய்தது?
இலங்கை தனது உள்நாட்டுப் போரை முடித்து விட்டு இராமேஸ்வரம் போரைத் துவங்கியிருக்கிறது. இந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும். ஆக இக்கொலைகளை நியாயப்படுத்த தொடர்ந்து இலங்கை ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அது எல்லை தாண்டுதல். இந்த வார்த்தையை இலங்கை மட்டும் சொல்லவில்லை. இந்தியாவும் சொல்கிறது.
சென்ற ஆண்டு மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட போது நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிகாரத்துறை அமைச்சர், “இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
அதேசமயம் “சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது .” என்றும் திமிராகப் பதிலளித்தார் எஸ்.எம் கிருஷ்ணா.
மராட்டியம், குஜராத், போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் பாகிஸ்தான் சுட்டுக் கொல்லாமல் பத்திரமாக அவர்களை திருப்பி அனுப்புகிறது. அரபு நாடுகளில் எல்லை தாண்டுதல் என்பது மிக சாதாரணமான விஷயம். காற்றின் போக்கு, கடல் நீரோட்டம், இரவு, இயற்க்கைச் சீற்றம், என ஒரு மீனவன் எல்லை தாண்ட எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.
இதுவல்லாமல் சர்வதேச கடல் எல்லையை வகுத்துள்ளவர்கள். இது சர்வதேச கடல் எல்லை என்று அடையாளக் குறிகளையோ, ஒளிரும் மிதவைகளையோ கடலில் மிதக்க விடுவதில்லை. அதிலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் இந்தியா இன்று வரை தனது தெற்கு எல்லையை மர்மமான முறையிலேயே வைத்துள்ளது.
2008- இல் இலங்கை அரசோடு இந்தியா செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் கடல் எல்லை குறித்த அம்சங்களும் உண்டு. இரு நாடுகளுக்குமிடையில் இன்று வரை மன்னார் வளைகுடா கடல் எல்லை தொடர்பான தீர்க்கமான முடிவுகள் இல்லை.
2009 ஜனவரியில் தங்கள் நாட்டு கடல் எல்லை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய தினேஸ் குணவர்த்தன “சிறிலங்காவின் வடகடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும், காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும், திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது. இவ்வடிப்படையில் இக்கடல் வலயத்தை இலங்கைக் கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறி இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.”
தினேஸ் குணரத்னாவின் இந்தக் கருத்தின்படி இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் கூட இறங்க முடியாது. கட்டுமரத்தை கடலில் செலுத்தி பாய்மரத்தை மடக்கி மீன் பிடிக்க துவங்க வேண்டும் என்றால் கூட ஆழிக்கடலுக்கு அப்பால் சென்றாக வேண்டும் என்ற நிலையில் தினேஸ் சொல்லும் எல்லைக் கோடு நமது அலைவாய்க்கரை வரை வந்து விடுகிறது.
கடற்கரை மேலாண்மைச் சட்டம்
மீனவர் கொலை என்னும் கொடூரத்தை வெறும் இலங்கை அரசின் இனவாத நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலும் நமது பாரம்பரிய கடற்கரையை கடற்கரை மேலாண்மைச் சட்டம் என்னும் நில அபகரிப்புச் சட்டத்தின் மூலம் கடலோரங்களையும் கடலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஏக போக பன்னாட்டுச் சுரண்டலின் ஒரு அங்கமாகவும் பார்க்க வேண்டும்.
இலங்கைக்கு ஒரு நோக்கமும் இந்தியாவுக்கு ஒரு நோக்கமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நோக்கமும் இருக்க முடியாது. ஒரே நோக்கம்தான் கடல், நிலம், மீன் வளம் யாவும் எங்களுக்கே உரியது என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தின் இடையூறாக மீனவன் இருப்பதும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான வலதுகரமாக இந்த மக்கள் விளங்கினார்கள் என்பதுமே இக்கொலைகளுக்குக் காரணம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தேர்தல் அமைப்பாலோ, ஓட்டுச் சீட்டுக்கட்சிகளாலோ இனி இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது.
பன்னாட்டு நிறுவனங்களையும், இந்நாட்டு முதலாளிகளையும் இவர்களை தாங்கிப்பிடிக்கும் அரசு, அரசியல் கட்சிகளையும் எதிர்த்து இந்திய மக்கள் நடத்தும் விடுதலைப் போரே மீனவர்களது படுகொலையையும் தடுத்து நிறுத்தும். அத்தகைய அரசியல் எழுச்சியை எழுப்புவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இந்த மீனவர் படுகொலைக்கு செய்யப்படும் அஞ்சலியாக இருக்கும்.

பதிவர்:  வினவு

ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!
தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!






இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்
http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!
பதிவர்:   உண்மைத்த‌மிழ‌ன்