Saturday, January 29, 2011

அரசுக்கு ஓர் கடிதம்

இலவசங்களால் வலைபின்னி
வாக்குறுதிகளால் தூண்டிலிட்டு
தேர்தல் தோணியிலே
வெற்றிமீன் பிடிப்பவருக்கும்

கூட்டணியெனும் வலைபின்னி
மத்தியமந்திரி எனும் தூண்டிலிட்டு
அதே தோணியில்
தொகுதிமீன் பிடிப்பவருக்கும்

உயிரைப் பணயம் வைத்து
வயிற்றைப் பிழைப்புக்கென்று
ஆழ்கடலில் வலைவீசி
வாழ்வோடு போராடுபவர்
வலிகள் புரிவதில்லை

இயற்கை சீறிடுமோ
என்பதுடன்
தோட்டாக்கள் துளைத்திடுமோ
எனவும்
தவியாய் தவித்தபடி
கரையில் கண்ணீருடன்
காத்திருக்கும் உற்றவரின்
வேதனைகள் பொருட்டில்லை

இன்று..

கணக்கற்ற இனக் கொலைகள்
கடலுக்குள் தினம் நடக்க
பிணக்கம் வேண்டாம் அரசுடனென
ஊடகங்கள் மூடி மறைக்க

வந்தாலும் வரக்கூடும்
நாளை விளம்பரங்கள்
அழகான மீன் படத்துடன்
முத்தான எழுத்துக்களில்
சிறுமி கொடுக்கும் கடிதம்

‘அன்புள்ள முதல்வருக்கு
ஆனந்தி எழுதுவது..
ஐந்து லட்சத்துக்கு நன்றி!’
***

நாம் கொடுப்போம் வாரீர்
மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு!
***



http://www.petitiononline.com/TNfisher/ மனுவில் கையெழுத்திட்ட 773-வது நபர்தான் நான் நேற்று. ஒரு இலட்சம் பேர்களின் கையெழுத்துக்கள் சேர்ந்தால் மீனவரின் தலையெழுத்தை மாற்றி அமைக்க உரியவரை அணுக முடியும் எனும் நம்பிக்கையுடன் தொடங்கப் பட்டிருக்கும் ஒரு கூட்டு முயற்சி இது. இணைந்திடுங்கள் குரல் கொடுக்க!


பதிவர்: ராமலஷ்மி

No comments:

Post a Comment