Saturday, January 29, 2011

மீனவனைக் கொல்வது இலங்கைக்கு வழக்கமான ஒன்றுதான்…!

‘இங்குள்ள இலங்கைத் தூதரகத்தை
இந்த விவகாரத்தில் கவனமாக இருக்குமாறு
அல்லது கருணைகூர்ந்து
பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்’ –
ப்ரணாப் அறிக்கை விடுவார்.
வழக்கமான ஒன்றுதான்…!

மன்மோகனுக்கு கருணாநிதியிடமிருந்து
லெட்டர் ஏவுகணைகளும்,
‘தந்தித்’ தடவல்களும்
பறந்து போகும்.
வழக்கமான ஒன்றுதான்…!

சிதம்பரத்தின் அன்ன நடை
இந்த நிகழ்வுகளில்
நிதானத்தைக் கடைப்பிடிக்கும்.
வழக்கமான ஒன்றுதான்…!

தினத்தந்தியில்
‘குடிகாரன் அம்மிக்கல்லால்
மனைவியைக் கொன்றான்’
என்கிற வாக்கில் இந்த செய்தியிருக்கும்.
வழக்கமான ஒன்றுதான்…!

இந்த புஷ்பவனத்து மீனவன்
நடுக்கடலில் தூக்கிலிடப்பட்டும்
எங்கோ ஒரு நகரத்து மேடையில்
நோட்டுக்குப் பாட்டுப்பாடும்
புஷ்பவனம் குப்புசாமியின்
டப்பாங்குத்துப் பாட்டு
பாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.
வழக்கமான ஒன்றுதான்…!

- புதிய பாமரன்

No comments:

Post a Comment